Wednesday, October 1, 2025

இஸ்லாம் பரிபூரணமானது

 இஸ்லாம் பரிபூரணமானது


நமது தேவைக்குப் போதுமான பணம் நம்மிடத்தில் இருக்கும் பட்சத்தில் நாம் பிறரிடம் கடன் வாங்குவதில்லை. நமது நாட்டிற்கு போதுமான செல்வவளம் நம்நாட்டில் இருக்கும்பட்சத்தில் பிறநாடுகளிடம் கடன் வாங்குவதில்லை.


நமக்குத் தேவையானது நம்மிடத்தில் இல்லாதபோதுதான் நாம் பிறரிடத்திலிருந்து அதை கோரி நிற்போம். நமக்குத் தேவையானது நம்மிடத்தில் மிகுந்து காணப்படும் போது அதை நாமும் பயன்படுத்துவோம். பிறருக்கும் அதை பகிர்ந்தளிப்போம். இதுதான் எதார்த்தம்.


இது பொருளாதாரத்திற்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. மாறாக இது அனைத்திற்கும் பொருந்தும் ஒரு தத்துவமாகும்.


அந்தவகையில் மனிதர்களுக்கான வழிகாட்டல்கள், உரிமைகளையும் கடமைகளையும் குறிப்பிடுதல், நேர்வழி எது? வழிகேடு எது? என்பது பற்றிய தெளிவுபடுத்தல்கள், யாருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் நீதியான வழிமுறையை போதித்தல் போன்ற விஷயங்களில் இஸ்லாம் நமக்கு வழங்கியிருப்பது என்ன? என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.


இவற்றில் இஸ்லாமிய மார்க்கம் நம்மை வறுமை நிலையில் வைத்துள்ளதா? அல்லது செழிப்பான நிலையில் வைத்துள்ளதா? என்பதை நாம் ஆய்ந்தறிய வேண்டும்.


ஏனெனில் இன்று பெரும்பாலான முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்களும் தங்களது வழிமுறையாக இஸ்லாமிய மார்க்கம் காட்டித் தருவதை எடுத்துக் கொள்ளாமல் மேற்கத்திய உலகத்தின் சட்டத்திட்டங்களையும் வழிமுறைகளையும் உயர்த்திப் பிடிப்பதை பார்க்கிறோம்.


மேற்கத்தியவர்கள் மீடியாக்கள் மூலமாகவும் இன்ன பிறவற்றைக் கொண்டும் தங்களை மேலானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அவற்றிலுள்ள உண்மையான யதார்தத்தை உணர்ந்து கொள்ளாதவர்கள் அவர்களின் வழிமுறையை சிறந்ததாக எண்ணிக் கொள்கின்றனர். 


தங்களது வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது போன்று அவர்கள் தங்களுக்கான வழிமுறைகளையும் இறக்குமதி செய்கிறார்கள். பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அவர்களிடத்திலிருந்து கடன் வாங்குகிறார்கள். ஆனால் அதுவே மிகப்பெரும் பிரச்சனையாகிப் போவதை அவர்கள் உணர்வதில்லை.


பொருட்களில் வேண்டுமானால் நமக்குப் பிறரிடத்தில் தேவைகள் இருக்கலாம். ஆனால் வழிமுறைகளிலோ சித்தாந்தங்களிலோ பிரச்சனைகளுக்கான தீர்வுகளிலோ இஸ்லாத்தில் பஞ்சமில்லை. அதை பிறரிடத்திலிருந்து இரவல் வாங்குவதற்கு எவ்விதத் தேவையுமில்லை.


அல்லாஹ் கூறுகிறான் :


இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்.


அல்குர்ஆன் 5 : 3


நபிகளார் வாழும் காலத்திலேயே இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்டுவிட்டது. அதாவது அனைத்துவிதமான வழிமுறைகளும் இறைவனாலும் இறைத்தூதராலும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆகவே அவற்றை முழுவதுமாக கடைபிடிக்குமாறு இறைவன் நமக்குக் கட்டளையிடுகிறான்.


يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱدْخُلُوا۟ فِى ٱلسِّلْمِ كَآفَّةًۭ وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ⭘ 


இறைநம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். 


அல் குர்ஆன் -   2 : 208


இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்டதால் அவற்றில் நாமும் முழுமையாக நுழைந்துவிட வேண்டும். அதாவது இஸ்லாத்தை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அறைகுறையாக பின்பற்றி பாதி முஸ்லிம்களாக இருக்கக்கூடாது.


فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا۟ فِىٓ أَنفُسِهِمْ حَرَجًۭا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا۟ تَسْلِيمًۭا⭘ 


உமது இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையிலான சச்சரவில் உம்மை நீதிபதியாக ஏற்று, (அதன்) பின்னர் நீர் தீர்ப்பளித்ததில் தம் உள்ளங்களில் எவ்வித அதிருப்தியும் கொள்ளாமல் முழுமையாகக் கட்டுப்படும்வரை அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.


அல் குர்ஆன் -   4 : 65


وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَـٰلًۭا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْجِبَالِ أَكْنَـٰنًۭا وَجَعَلَ لَكُمْ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلْحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأْسَكُمْ ۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ⭘ 


அல்லாஹ், தான் படைத்தவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களை உண்டாக்கினான். மலைகளில் உங்களுக்கு மறைவிடங்களை அமைத்தான். உங்களுக்காக, வெப்பத்தில் உங்களைப் பாதுகாக்கும் சட்டைகளையும், உங்கள் போர்களில் உங்களைப் பாதுகாக்கும் ஆடைகளையும் உண்டாக்கினான். இவ்வாறே நீங்கள் பணிந்து நடப்பதற்காக உங்களுக்குத் தனது அருட்கொடையை முழுமைப்படுத்துகிறான்.


அல் குர்ஆன் -   16 : 81

Sunday, September 7, 2025

இஸ்லாம் கூறும் தக்வா

 ஏக இறைவனின் திருப்பெயரால்…










இஸ்லாம் கூறும் தக்வா




புத்தகமாக டவுன்லோடு செய்ய

இஸ்லாம் கூறும் தக்வா

செய்யது காமித்

6381653548

இஸ்தப்ரக் பதிப்பகம்
















தக்வா என்ற அரபி வார்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான வார்த்தை. இதை தமிழக முஸ்லிம்கள் அடிக்கடி பயன்படுத்துகின்றனர். அல்லாஹ்வும் குர்ஆனில் தக்வாவை பற்றி நிறைய இடங்களில் குறிப்பிட்டு காட்டுகிறான். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தன் தோழர்களுக்கு தக்வாவைப் பற்றி அதிகமாக வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆகவே தக்வாவைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது.


பாகம் 1 - தக்வா வின் அர்த்தம்


முதலில் தக்வா என்ற அரபி வார்த்தைககு என்ன அர்த்தம்? என்பதை தெரிந்து காெள்ள வேண்டும். இதற்கு தமிழக முஸ்லிம்கள் இறையச்சம் என்ற மொழிபெயர்ப்பை தருகின்றனர். ஆனால் தக்வா என்ற அரபிச் சொல் இறையச்சம் என்ற ஒற்றை அர்தத்தோடு முடியக்கூடிய வார்த்தை அல்ல. தக்வா என்பது பரந்து விரிந்த அர்த்தத்தை கொண்ட ஒரு சொல்.


மொழியடிப்படையில் தக்வா التقوى என்ற சொல் விகாயத் என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். விகாயத் என்பதற்கு தன்னைத் தானே பாதுகாத்தல் என்று அர்த்தம். இது மொழியில் ரீதியிலானது.


அதைப்போல் மார்க்க அடிப்படையில் தக்வாவிற்கு இறையச்சம் அல்லாத பல அர்த்தங்கள் உண்டு. திருமறையில் அல்லாஹ் தக்வாவை பல அர்த்தங்களில் பயன்படுத்தியுள்ளான். 


எந்தெந்த அர்த்தங்களிலெல்லாம் தக்வா பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.






விலகுதல்


وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ


அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இதன்மூலம் நீங்கள்) தக்வாவை பெற்றுக்கொள்வீர்கள்.  திருக்குர்ஆன்  2:179


இந்த வசனத்தில் பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் நமக்கு வாழ்க்கை இருப்பதாக அல்லாஹ் சொல்கிறான். 


இதைப் படித்தவுடன், ‘அது எப்படி பழிக்கு பழி வாங்கும் சட்டத்தில் வாழ்க்கை இருக்கும்?’ என்ற சந்தேகம் நமக்கு வரலாம். சற்று சிந்தித்தால் அல்லாஹ் சொல்லும் உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.


இந்த உலகத்தில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியான மனநிலையை கொண்டவர்கள் அல்ல. பலதரப்பட்ட மக்களாகத்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். இதில் கோபத்தை அடக்கி ஆளக்கூடிய மனிதனும் இருப்பான். கோபத்தை கட்டுப்படுத்த முடியாத மனிதனும் இருப்பான். 


இப்படி வாழக்கூடிய சூழலில் பழிக்கு பழி வாங்கும் சட்டத்தை தடை செய்தோம் என்றால் என்ன நடக்கும்?. 


உதரணத்திற்கு ஒரு சண்டையில் ஒருவனுடைய கண்ணை வேறொருவன் பறித்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். கண்ணை இழந்தவன் பொறுமையை கடைபிடிப்பவனாக இருந்தால் தன் கண்ணைப் பறித்தவனை மன்னித்துவிடுவான். 


ஆனால் எல்லா மனிதர்களுக்கும் இந்த மன்னிக்கும் தன்மை இருக்காது. மன்னிக்கவே முடியாத குணத்தை கொண்ட மனிதனும் இருக்கத்தான் செய்வான். அவனிடத்தில் நீ பழிக்குப்பழி வாங்கக்கூடாது என்று சொன்னால் அவன் வேறொரு சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருப்பான். அச்சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில் அவனது உள்ளத்தில் கோபத்தீ காட்டுத்தீ போல் எரிந்து கொண்டிருக்கும். அவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் கண்ணுக்கு கண்ணை எடுப்பதற்கு பதிலாக கோபத்தில் உயிரையே பறித்துவிடுவான். 


பதிலுக்கு இறந்தவனுடைய குடும்பத்தினர் இவனை கொல்வார்கள். 


அதன்பிறகு இவர்கள் அவர்களை கொல்ல, அவர்கள் இவர்களை கொல்ல…. என்று பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுவிடும். 


இப்படிப்பட்ட சூழ்நிலை நடக்கக்கூடாது. அனைவரும் இறக்கக்கூடாது என்பதற்காக அல்லாஹ் பழிக்கு பழி வாங்கும் சட்டத்தை அனுமதித்திருக்கிறான். இதன் மூலம் கொலைகள் தடுக்கப்படுவதால் இதில் வாழ்வு இருப்பதாகவும் சொல்லிக்காட்டுகிறான். 


இப்போது விஷயத்திற்கு வருவோம், 


இப்படி பழிக்கு பழி வாங்குவதின் மூலமாக நீங்கள் தக்வாவை பெற்றுக்கொள்ளலாம் என்று அல்லாஹ் சொல்கிறான். தக்வாவிற்கு இறையச்சம் என்று மட்டும் மொழி பெயர்த்தால் பழிக்கு பழி வாங்குவதின் மூலமாக நீங்கள் இறையச்சத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று வரும். பழிக்கு பழி வாங்குவதின் மூலமாக நமக்கு எப்படி இறையச்சம் கிடைக்கும்?. ஆகவே இதற்கு இறையச்சம் என்று மொழி பெயர்க்கக்கூடாது. இந்த இடத்தில் தக்வா என்பதற்கு விலகிக்கொள்வீர்கள் என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும்.


அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து நீங்கள்) விலகிக் கொள்வீர்கள்.  திருக்குர்ஆன்  2:179


இப்படி மொழிபெயர்ப்பது தான் சரியாகும். ஆகவே அல்லாஹ் இந்த இடத்தில் தக்வாவிற்கு "விலகிக்கொள்ளுதல்" என்ற அர்தத்தை தருகிறான்.


அதே போல் தக்வாவிற்கு இறையச்சம் அல்லாத வேறு அர்த்தத்தை கொடுக்கும் இன்னொரு வசனத்தைப் பாருங்கள்





وَمَا كَانَ اللَّهُ لِيُضِلَّ قَوْمًا بَعْدَ إِذْ هَدَاهُمْ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَ ۚ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ


ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்களுக்குத் தக்வாவை தெளிவுபடுத்தும் வரை, அவர்களை வழிகேட்டில் விடுவதில்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன்  9:115


இந்த வசனத்தில் அல்லாஹ் நேர்வழி காட்டிய சமுதாயத்தைப் பற்றி சொல்லிக் காட்டுகிறான். ஒரு சமுதாயம் நேர்வழியை பெறுகின்றதென்றால் அந்த சமுதாயம் அல்லாஹ்வின் அச்சத்தை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அல்லாஹ்வின் அச்சத்தைப் பெறாத சமுதாயம் நேரான வழியில் பயணிக்காது. 


அல்லாஹ் இந்த வசனத்தில், ஒரு சமுதாயத்திற்கு நேர்வழி காட்டியதற்கு பிறகு அந்த சமுதாயத்திற்கு தக்வாவை தெளிவுபடுத்தாத வரை வழி கெடுப்பதில்லை என்று சொல்கிறான். இதில் தக்வாவிற்கு இறையச்சம் என்று மொழி பெயர்த்தால்,


ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் இறையச்சத்தை அவர்களுக்குத் தெளிவுபடுத்தும் வரை, அவர்களை வழிகேட்டில் விடுவதில்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். என்று வரும்.


 இது சரியான மொழிபெயர்ப்பு ஆகாது. இந்த மொழி பெயர்ப்பு இறையச்சத்தையும் நேர்வழியையும் வெவ்வேறாக பிரிக்கிறது. ஆகவே இந்த வசனத்திற்கு இறையச்சம் என்று மொழி பெயர்க்காமல் "தவிர்ந்து நடக்க வேண்டிய விஷயங்கள்" (ஹராமானது) என்று மொழி பெயர்க்க வேண்டும்.


ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்க்க வேண்டியவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்தும் வரை, அவர்களை வழிகேட்டில் விடுவதில்லை. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன்  9:115.


இப்போது படித்து பாருங்கள். இதுதான் சரியான மொழிபெயர்ப்பாக அமையும். ஆக இந்த வசனத்திலிருந்தும் தக்வாவிற்கு "தவிர்ந்து நடத்தல்" “விலகியிருத்தல்” என்ற அர்த்தம் வரும் என்பதை அலலாஹ் நமக்கு உணர்த்தி காட்டுகிறான்.


இதிலிருந்து மார்க்க அடிப்படையில் தக்வா என்பது ஹராமானதிலிருந்து லிலகியிருப்பதைக் குறிக்கும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். 

தப்பித்தல்


தக்வா என்பதற்கு விலகிக் காெள்ளுதல், தவிர்ந்து நடத்தல் என்ற அர்த்தம் இருப்பது போல் தப்பித்தல் என்ற அர்த்தமும் உண்டு. அதற்கான ஆதாரம் இதோ,


فَكَيْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ يَوْمًا يَّجْعَلُ الْوِلْدَانَ شِيْبَا  ‏


எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தக்வாவை பெறுவீர்கள்? (அல்குர்ஆன் : 73:17)


இந்த வசனத்தில் அல்லாஹ் மறுமை நாளைப்பற்றி பேசுகிறான். மறுமை நாள் என்பது மிகவும் அச்சம் ஏற்படுத்தக்கூடிய நாள். 


அங்கே அனைவரும், ‘நம்முடைய நிலைமை என்னவாகுமோ?’ என்ற அச்சத்தோடுதான் காணப்படுவார்கள். 


அங்கு, அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தை வழங்குவானா? அல்லது நரகத்தை வழங்குவானா? என்ற பயத்தோடு காணப்படுவோம். 


அப்படிப்பட்ட நாளில் இறையச்சம் நமக்கு மிகுதியாக இருக்கும். அல்லாஹ்வின் மீதான அச்சம்தான் அங்கு அனைவரையும் பிடித்திருக்கும்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேலே குறிப்பிட்ட வசனத்தில் தக்வாவிற்கு இறையச்சம் என்று மொழிபெயர்த்தால் வரக்கூடிய வாசகம்,


(ஏகஇறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு இறையச்சத்தைப் பெறவீர்கள்? திருக்குர்ஆன்  73:17


இது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. மறுமை நாளில் நாம் இறையச்சத்தோடுதான் காணப்படுவோம். 


ஆகவே இங்கு அல்லாஹ் தக்வா என்பதை இறையச்சம் என்று அர்த்தத்தில் பயன்டுத்தவில்லை. மாறாக "தப்பித்தல்" என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தயிருக்கிறான்.


(ஏகஇறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பித்து கொள்வீர்கள்?

திருக்குர்ஆன்  73:17


இப்போது வாசித்து பாருங்கள் சரியாக இருக்கும். ஆக இந்த வசனத்தின் அடிப்படையில் தக்வாவிற்கு தப்பித்தல் என்ற அர்த்தமும் உண்டு என்பது தெளிவாகிறது.


ஆகவே இதன்மூலம் தக்வா என்பதற்கு நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுதல் என்ற அர்த்தம் வருகிறது 


தீமை


தக்வா என்ற அரபிச் சொல்லுக்கு விலகிக்கொள்ளுதல், தவிர்ந்து நடத்தல்,  தப்பித்தல் என்ற அர்த்தங்கள் இருப்பது போல் தீமை என்ற அர்த்தமும் உள்ளது.


فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا

قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا

وَقَدْ خَابَ مَن دَسَّاهَا


அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தக்வாவையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார். திருக்குர்ஆன்  91:8-10


இந்த வசனங்களில் அல்லாஹ் உள்ளங்களைப் பற்றி பேசுகிறான். அதில் அல்லாஹ், உள்ளத்திற்கு நன்மைகளையும் தக்வாவையும் சொல்லிக் கொடுத்திருப்பதாக சொல்லிக்காட்டுகிறான்.


இந்த இடத்தில் தக்வாவிற்கு இறையச்சம் என்று மொழிபெயர்ப்பது பொருத்தமானதாக இருக்காது. காரணம் இறையச்சம் இருந்தால்தான் நன்மையை பெற முடியும். இறையச்சம் இல்லாமல் செய்யும் செயல்கள் நன்மையை பெற்றுத்தராது(இதைப் பின்னால் விரிவாக பார்க்க இருக்கிறோம்).


தொடர்ந்து வரக்கூடிய வசனங்களைப் பார்த்தாலும் இறையச்சம் என்ற அர்த்தம் பொருத்தமில்லாதது என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆக இந்த வசனத்தில் தக்வா என்று அல்லாஹ் குறிப்பிடுவது தீமையைத்தான்.


அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார். திருக்குர்ஆன்  91:8-10


இப்பொழுது படித்துப் பாருங்கள் தெளிவாக இருக்கும். 


அல்லாஹ் உள்ளத்திற்கு நன்மையையும் தீமையையும் அறிவித்து கொடுத்தான். நன்மையை கொண்டு உள்ளத்தை தூய்மைபடுத்தினால் வெற்றிபெறுவோம். தீமையைக் கொண்டு உள்ளத்தை களங்கப்படுத்தினால் நஷடமடைவோம். இதுதான் சரியான மொழி பெயர்ப்பு. 


ஆகவே தக்வாவிற்கு தீமை என்ற அர்த்தமும் உண்டு. அதாவது தீமையிலிருந்து விலகியிருப்பதுதான் தக்வாவாகும்.


வரம்பிற்குள் நடத்தல்


சில வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அதன் எதிர்பதமான வார்த்தையைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.


உதாரணமாக நன்மை என்ற வார்த்தையின் அர்த்தத்தை அதன் எதிர்பதமான தீமை என்ற வார்த்தையைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். தீமைக்கு எதிரானது நன்மை என்று சொல்லலாம்.


அதேபோல், உண்மை என்பதை விளங்க அதற்கு எதிர்பதமான பொய்யைக் கொண்டு விளங்கிக் காெள்ளலாம். பொய்யிற்கு எதிராக இருப்பது உண்மை என்று சொல்லலாம்.


அதுபோலத்தான் அல்லாஹ் தக்வாவிற்கு எதிர்பதமாக உத்வான் (வரம்பு மீறுதல்) என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான்.


ۘ وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ


நன்மையிலும், தக்வாவிலும் ஒருவருக்கொருவர் 

உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.   திருக்குர்ஆன்  5:2


இதில் இரண்டு விஷயங்களில் ஒருவருக்காெருவர் உதவிக்கொள்ள வேண்டும் என இறைவன் கூறுகிறான். அவை நன்மை மற்றும் தக்வா ஆகும்.


இன்னும் இரண்டு விஷயங்களில் உதவக்கூடாது என்று கட்டளையிடுகிறான். அவை பாவம் மற்றும் வரம்பு மீறல் ஆகும்.


இந்த வசனத்தில் நன்மைக்கு (பிர்ரு) உதவுங்கள் என்று கூறி அதற்கு எதிர்பதமாக இருக்கும் பாவத்திற்கு(இஸ்மி) உதவக்கூடாது என்று கூறுகிறான்.


 அதேபோல் வரம்பு மீறுதல் (உத்வான்) என்பதில் உதவி செய்யாதீர்கள் என்று கூறிய இறைவன் அதற்கு எதிர்பதமாக தக்வாவை குறிப்பிட்டு அதற்கு உதவி செய்யுமாறு கூறுகிறான்.


வரம்பு மீறுதலுக்கு எதிர்பதம் வரம்பிற்குள் நடத்தல் என்பதாகும். அதாவது ஹலால் ஹராம் என்ற வரம்பை பேணி நடத்தல் என்பதாகும்.


ஆக இங்கு தக்வா என்பதற்கு ஹலால் ஹராம் என்ற வரம்பிற்குள் நடத்தல் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.


இந்த வசனத்தில் அதற்கு அடுத்து வத்தக்குல்லாஹ் என்று அல்லாஹ் சொல்கிறான். இதில் வத்தக்குல்லாஹ் என்பதற்கு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற அர்த்தம் வரும்.


நன்மையிலும், ஹலால் ஹராமை பேணி நடப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். திருக்குர்ஆன்  5:2


இதுதான் இதன் சரியான மொழிபெயர்ப்பாக அமையும்.


குற்றம் புரியாதோர்


தக்வா என்ற வார்த்தை ‘பாவத்திலிருந்து விடுபட்டு இருத்தல்’ என்ற அர்தத்தையும் தரும்.


அல்லாஹ் கூறுகிறான் :


أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الْأَرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ


நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைப் பூமியில் குழப்பம் செய்வோரைப் போல் ஆக்குவோமா? அல்லது தக்வா உள்ளவரைக் குற்றம் புரிந்தோரைப் போல் ஆக்குவோமா? திருக்குர்ஆன்  38:28


நல்லறங்கள் செய்தோர் எவ்வாறு குழப்பவாதிகளாக கருதப்படமாட்டார்களோ? அதேபோல் தக்வா உள்ளோரும் குற்றம் புரிந்தோராக கருதப்படமாட்டாரகள் என இறைவன் தெரிவிக்கிறான்.


இந்த வசனத்திலும் தக்வா என்பது குற்றத்திற்கு எதிரானது என்பதை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். பாவத்திற்கு எதிரானதாக தக்வாவை வருணிக்கிறான். ஆக தக்வா என்பது பாவத்திலிருந்து விடுபடுவதையும் குறிக்கும் என்பது இதிலிருந்து விளங்குகிறது.


ஆக மொத்தத்தில் மார்க்க ரீதியாக தக்வா என்பதற்கு சொல்லப்படும் விளக்கம் :

அல்லாஹ்விற்கு அஞ்சி, அவன் தடுத்த செயல்களிலிருந்து விலகி, அவன் விதித்த வரம்பிற்குள் நடந்து, நரகத்திலிருந்து தன்னைத் தானே பாதுகாத்தல் என்பதாகும்.


எதற்காக இந்த விளக்கம் சொல்லப்படுகிறதென்றால்

தக்வா என்பதற்கு வெறுமனே இறையச்சம் என்று மொழிபெயர்த்து 

இறையச்சம் என்றால் என்ன? என்பது தெரியாமல், எப்படி இறையச்சத்தோடு நடப்பது? என்று தெரியாமல், ஷைத்தானின் வலைக்குள் விழுந்து பாவச்செயல்களிலிருந்து மீள முடியாமல் பல முஸ்லிம்கள் தவிக்கின்றனர்.


எனவே முஸ்லிம்கள் அனைவரும் தக்வா என்றாலே அல்லாஹ்விற்கு பயந்து பாவத்திலிருந்து விடுபடுவதைத்தான் குறிக்கும் என்று விளங்கிக் கொண்டால் ஷைத்தானின் வலைக்குள் சிக்காமல் எளிமையாக தப்பித்து விடலாம். இதன் மூலம் பாவத்தின் அருகில் கூட செல்லாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.


தக்வா எனும் ஆடை


அதனால்தான் அல்லாஹ் தக்வாவை ஆடையுடன் ஒப்பிட்டு சொல்லிக்காட்டுகிறான்.


ஆடைகள் எப்படி நம்மை அசுத்தங்களிலிருந்து பாதுகாக்குமோ அதைப் போல் தக்வா என்பது பாவம் என்ற அசுத்தத்திலிருந்து நம் உள்ளத்தை பாதுகாக்க வேண்டும். 


அல்லாஹ் கூறுகிறான்


يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ۚ ذَٰلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ


ஆதமுடைய மக்களே உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். தக்வா எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது திருக்குர்ஆன்  7:26


அல்லாஹ் ஆடைகளில் சிறந்ததாக தக்வாவை சொல்லிக்காட்டுகிறான். தக்வாவை ஆடையாக உவமானப்படுத்தி காட்டுகிறான்.


ஆடையைப் பொறுத்த வரையில் அது நம்முடை மறைவிடங்களை மறைக்கவும் நம்மை தூசிகளிலிருந்து பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதே போல் தக்வா நம்முடைய கெட்ட எண்ணங்களை மறைத்து பாவத்திலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும். அதற்கு அல்லாஹ்வுடைய அச்சம் மிக இன்றியமையாதது.


ஒரு மனிதனை அடையாளப்படுத்தக்கூடியதாக ஆடை இருககிறது. உதாரணத்திற்கு மருத்துவருக்கென்று தனி ஆடை, நீதிபதிக்கென்று தனி ஆடைகள், இராணுவத்திற்கு தனி ஆடைகள் என்று ஒவ்வொரு துறையையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆடைகள் அமைந்திருக்கிறது. ஒரு மனிதன் மருத்துவரின் உடையணிந்து வந்தால், அவர் தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்தாமலேயே அவரின் ஆடையை வைத்து அவரை மருத்துவர் என்று நாம் கண்டுகொள்ளலாம். அதேபோல் தக்வா நம்மை அடையாளப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு மனிதரை பார்த்தவுடனையே அவர் முஸ்லிம்தான் என்று அனைவரும் அறிந்து காெள்ளக்கூடிய வகையில் நாம் இருக்க வேண்டும். எந்த தேசங்களுக்கு சென்றாலும் நமது செயல்பாடுகளைக் கொண்டே நம்மை முஸ்லிம் என்று அவர்கள் கண்டு காெள்ள வேண்டும். அதற்கு நாம் தக்வாதாரியாக செயல்பட வேண்டும்.

நமது ஆடைகளில் அவ்வப்போது அழுக்கு ஏற்படும். நமது ஆடைகளில் அழுக்கு ஏற்படும்போதெல்லாம் நாம் நமது ஆடைகளை சுத்தம் செய்வோம். அழுக்கை நீக்குவோம். அதேபோல் தக்வா எனும் ஆடையை அணிந்து கொண்டவர்கள், அவர்களது தக்வாவில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அதை உடனே நிவர்த்தி செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். செய்த பாவத்திற்கு தவ்பா செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். 


ஆக இதிலிருந்தும் அல்லாஹ் தக்வாவை பாவத்திலிருந்து விடுபடுவதற்காக பயன்படுத்துவதை நாம் அறிந்து காெள்ளலாம்.


பாவத்தை சொல்லும் போது


அதனால் தான் அல்லாஹ் பாவத்தை சொல்லும்போதெல்லாம் கூடவே தக்வாவையும் சேர்த்து சொல்வான். ஏனென்றால் பாவத்தை விடுவதுதான் தக்வா. 


உதாரணத்திற்கு சில வசனங்கள் . 


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ


நம்பிக்கை கொண்டோரே! தக்வாவை மேற்கொள்ளுங்கள் (அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்) ! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள் .  திருக்குர்ஆன்  2:278


வட்டி என்பது இறைவன் தடுத்த பாவமான செயல். ஆகவே வட்டியைப் பற்றி எச்சரிப்பதற்கு முன்னால் தக்வாவைக் குறித்து இறைவன் கட்டளையிடுகிறான். 


இதன்மூலம், அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு அவன் தடுத்த விஷயங்களில் வட்டியும் ஒன்று என்பதை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.



அதே போல் இன்னொரு வசனத்தையும் பாருங்கள்


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ


நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்

திருக்குர்ஆன்  49:12


இதிலும் புறம், கோள் போன்ற ஹராமான விஷயங்களைப் பற்றி எச்சரிக்கை செய்துவிட்டு பின்னர் தக்வாவைக் குறித்து சொல்லிக்காட்டுகிறான்.


அதேபோல் நபியின் மனைவிமார்களுக்கு தடுக்கப்பட்ட காரியத்தை குறிப்பிடும் போதும் அத்தோடு சேர்த்து தக்வாவையும் சொல்கிறான்.


يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا


நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (தக்வாவை) இறைவனுக்கு அஞ்சி அவன் தடுத்த விஷயங்களிலிருந்து தவிர்ந்து நரகத்திலருந்து உங்களை காத்துக் கொள்ள விரும்பினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். திருக்குர்ஆன்  33:32


குலைந்து பேசுவது தடுக்கப்பட்ட காரியம் என்று சொல்லும் போது அதனுடன் சேர்த்து தக்வாவையும் சொல்கிறான். இதிலிருந்தும் தக்வாவின் பிரதான அர்த்தமே அல்லாஹ்விற்கு அஞ்சி பாவத்திலிருந்து விடுபடுவதுதான் என்று விளங்கிக்கொள்ளலாம்.











பாகம் 2 - தக்வாவிற்கு உரித்தானவன் யார்?


தக்வாவின் விரிந்த அர்தத்தை அறிந்துகொண்ட நாம், அடுத்ததாக தக்வாவிற்கு உரித்தானவன் யார்? என்பதை அறிந்து காெள்ள வேண்டும். 


அதாவது நாம் அஞ்சுவதற்கு தகுதியானவன் யார்? 


இவையெல்லாம் பாவமான காரியங்கள் என்று பாவத்தின் பட்டியலை சொல்வதற்கு தகுதியானவன் யார்? 


பாவம் செய்பவர்களை நரகத்தில் போட்டு பொசுக்குவதற்கு அதிகாரம் படைத்தவன் யார்? 


இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


இதை அல்லாஹ் தன் திருமறையில் சாெல்லிக்காட்டுகிறான்.


وَمَا يَذْكُرُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ


அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் படிப்பினை பெறுவதில்லை. அவனே தக்வாவிற்கு உரித்தானவன். மன்னித்தல் உடையவன். திருக்குர்ஆன்  74:56


இந்த வசனத்தில் தக்வாவிற்கு உரித்தானவனாக அல்லாஹ் தன்னையே குறிப்பிட்டு காட்டுகிறான். 


அதாவது நாம் அல்லாஹ்விற்கு மட்டுமே அஞ்ச வேண்டும். அல்லாஹ் மட்டும்தான் ஹலால் ஹராம் என்ற எல்லையை வகுக்கக்கூடியவன். அவனது எல்லையிலிருந்து வரம்பு மீறுபவர்களை அவனே நரகத்தில் போட்டு பொசுக்குவான் என்று நம்புவதுதான் உண்மையான தக்வாவாகும். 


ஆகவே அல்லாஹ் மட்டும்தான் இறைவன் என்பதை எவ்வாறு ஏற்றுக்காெண்டிருக்கிறோமோ? அதேபோல் அவன் மட்டும்தான் தக்வாவிற்கு உரித்தானவன் என்பதையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான நம்பிக்கை. அப்படி நம்புபவர்தான் உண்மையான முஸ்லிமாக இருப்பர்.


அதாவது


நாம் யாரை அஞ்ச வேண்டும்  - அல்லாஹ்வை.


நாம் யார் தடுத்த விஷயங்களிலிருந்து விலக வேண்டும் - அல்லாஹ் தடுத்த விஷயத்திலிருந்து.


யார் தயாரித்த நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டும் - அல்லாஹ் தயாரித்த நரகத்திலிருந்து.


இதை நாம் தெளிவாக நமது உள்ளத்தில் இருத்த வேண்டும்.


இதை இன்னொரு வசனத்திலும் இறைவன் குறிப்பிட்டுக்காட்டுகிறான்.


وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ‏


எனவே நல்லறிவுடையோரே! எனக்கே தக்வாவுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2:197)


இவ்வசனத்திலும் தனக்கு மட்டுமே தக்வா உரித்தானது என்று இறைவன் குறிப்பிட்டுக்காட்டுகிறான். 


ஆகவே அஞ்சுவதற்கு தகுதியானுவனும், ஹலால் ஹராமை உருவாக்கியவனும், நரகத்தை படைத்தவனுமாக அல்லாஹ் இருக்கின்ற காரணத்தினால் அவன் மட்டும் தான் தக்வாவிற்கு உரித்தானவனாக இருக்கின்றான்.




பாகம் 3 - அல்லாஹ்வை அஞ்சுவதற்கான நியாயமான காரியம்


தக்வாவிற்கு உரித்தானவனாக அல்லாஹ் மட்டுமே இருக்கிறான் என்பதற்கான ஆதாரத்தைப் பார்த்தோம். 


தற்போது அதற்கான நியாயமான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.


அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ்


படைப்புகள் அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே. ஆகவே நாம் அவனக்கு மட்டுமே தக்வாவை காட்டுவதுதான் சரியானதாக இருக்கும்.


وَلَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَلَهُ الدِّيْنُ وَاصِبًا‌  اَفَغَيْرَ اللّٰهِ تَـتَّـقُوْنَ‏


வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவையாக இருக்கிறது). வழிபாடுகள் அனைத்தும் அவனுக்கே உரியதாக இருக்கிறது; (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் தக்வாவிற்கு உரியவனாக ஏற்றுக் கொள்கிறீர்கள்?

(அல்குர்ஆன் : 16:52)


அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்திருக்கிறான் எனும் போது அவனைத் தவிர மற்றவற்றிற்கு தக்வாவை வழங்கினால் அது மோசமான அநியாயமாகும்.


ஒருவன் தன்னைக் கஷ்டப்பட்டு பெற்று வளர்த்தெடுத்த பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் பிறரின் பேச்சைக் கேட்டு நடந்தால் அது எப்படி மோசமான செயலோ அதைவிட மோசமான செயல்தான் அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றுக்கு தக்வாவைக் காட்டுவது.



இதை இன்னொரு வசனத்திலும் இறைவன் கூறிக்காட்டுகிறான்.


قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ‏

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ قُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏


“ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக. அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு தக்வாவை செலுத்த மாட்டீர்களா?” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் : 23:86,87)


ஆக அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ் தான். எனவே அவன்மட்டும்தான் தக்வாவிற்கு உரித்தானவன்.

நமக்குத் தேவையானவற்றை வழங்குபவன் அவனே


இறைவன் நம்மைப் படைத்ததோடு மட்டுமில்லாமல் நமக்குத் தேவையான அனைத்தையும் தந்திருக்கிறான். இந்நிலையில் அவனைத் தவிர மற்றவற்றுக்கு தக்வாவை உரித்தாக்குவது நன்றி கெட்டத்தனமாகும்.


அல்லாஹ் கூறுகிறான் :


قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ مَنْ يُّخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَ‌ فَسَيَـقُوْلُوْنَ اللّٰهُ‌ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏


“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் தக்வாவுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

(அல்குர்ஆன் : 10:31)


يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌  وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏


மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 4:1)


நமக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அல்லாஹ் ஏற்படுத்தித் தந்திருக்கிறான். ஆகவே நாம் அவனுக்குத் தான் நமது தக்வாவை செலுத்த வேண்டும். இல்லையெனில் அது நன்றி கெட்டத் தன்மையாக ஆகிவிடும்.




















பாகம் 4 - இஸ்லாத்தின் அடிப்படை


தக்வா தான் இஸ்லாத்தின் முக்கிய அடிப்படையாக இருககிறது.


ஒரு மனிதனுக்கு மூச்சுக்காற்று, சுவாசக்காற்று எவ்வளவு இன்றியமையாததோ? அதைப் போன்று தக்வாவும் ஒரு முஸ்லிமுக்கு மிகவும் இன்றியமையாததாகும்.  ஆகவே தக்வா என்பது ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்க்கையில் உயிரோடும், உணர்வோடும் இரண்டறக் கலந்திருக்க வேண்டிய ஓர் உயரிய அம்சமாகும்.


ஒரு முஸ்லிமின் எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் எவ்வளவு பெரிய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகரித்து விடுவான் என்கிறது இஸ்லாம்.


எந்த அளவிற்கு இதை இஸ்லாம் வலியுறுத்துகிறதென்றால், ஒருவன் முஸ்லிமா? இல்லையா? என்பதை முடிவு செய்யக்கூடியதாக தக்வாவையே இறைவன் ஆக்கியிருக்கிறான். அந்த அளவிற்கு தக்வா முஸ்லிமுக்கு முக்கியமானதாக இருககிறது.


முஃமின் யார்


இந்த அளவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தக்வா இருக்கின்ற காரணத்தினால்தான் முஃமின்கள் என்றாலே தக்வாவை பெற்றவர்கள்தான் என்று அல்லாஹ் சொல்கிறான்.


إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ


நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். திருக்குர்ஆன்  8:2.


அல்லாஹ்வை பற்றி நியாபகப்படுத்தப்பட்டவுடன் யாருடைய உள்ளங்கள் நடுங்குகிறதோ அவர்கள் தான் உண்மையான முஃமின்கள் என்பதை அல்லாஹ் இந்த வசனத்தில் தெளிவாக சொல்லிக்காடடுகிறான். ஆக தக்வா இருந்தால்தான் நாம் உண்மையான முஃமின்கள்.


அதேபோல் இன்னொரு வசனத்தையும் பாருங்கள்.


"மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?'' என்று சீடர்கள் கூறிய போது, "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் (இவ்வாறு கூறுவதிலிருந்து) அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!'' என்று அவர் கூறினார். 


திருக்குர்ஆன்  5:112


நம்பிக்கை கொண்ட முஸ்லிமாக நாம் இருந்தால், கண்டிப்பாக அல்லாஹ்விற்கு அஞ்சி நடக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.  இதைத்தான் மேற்கண்ட வசனத்தில் ஈஸா நபியவர்கள் தனது சீடர்களுக்கு அறிவுரையாக கூறியிருக்கிறார்கள்.


அதனால் தான் இஸ்லாம் அனைத்து வணக்க வழிபாடுகளிலும் தக்வாவை எதிர்பார்க்கிறது.


உதாரணத்திற்கு சில,


ஹஜ் வணக்கம் :


وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ ۚ وَاتَّقُونِ يَا أُولِي الْأَلْبَابِ


ஹஜ்ஜுக்குத் (தேவையானவற்றைத்) 

திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் தக்வாவே (அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் ஹஜ்ஜில் தடுத்த விஷயத்திலிருந்து விலகி நரகத்திலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்து கொள்வதுதான்) மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை தக்வா செய்யுங்கள். திருக்குர்ஆன்  2:197


இந்த வசனத்தில் ஹஜ்ஜைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒரு தூண். மிக முக்கியமான வணக்கவழிபாடு. இந்த ஹஜ் என்ற வணக்க வழிபாடு நம்மீது கடமையாகுவதற்கு இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். 


ஒன்று சென்றுவர பொருளாதார சக்தியை பெற்றிருக்க வேண்டும். 


மற்றொன்று பிரயாணத்திற்கான உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும். 


இந்த இரண்டையும் பெற்றவர்கள் ஹஜ் கடமையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.


ஹஜ் என்ற வணக்க வழிபாடு பிரயாணத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் பிரயாணத்திற்கு தேவையானதை திரட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் திரட்டிக் காெள்வதில் மிக முக்கியமானதாக தக்வா தான் இருக்க வேண்டும். 


ஆடைகளையும் பொருளாதாரத்தையும் திரட்டிவிட்டு தக்வா வை திரட்டாமல் ஹஜ் செய்தால் அதனால் எந்த பலனும் இல்லாமல் போய்விடும். 


தக்வா இல்லாத ஹஜ் ஏற்றுக் கொள்ளப்படாத ஹஜ்ஜாக மாறிவிடும். 


ஆக ஹஜ் என்ற இஸ்லாத்தின் தூணிற்கு தக்வா மிகவும் அவசியம் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலமாக இறைவன் வலியுறுத்துகிறான்.


 குர்பானி பிராணியை அறுத்தல்


அதுமட்டுமில்லாமல் குர்பானி பிராணியை அறுப்பது பற்றியும் அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.


لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ ۚ


அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள தக்வாவே அவனைச் சென்றடையும்.  திருக்குர்ஆன்  22:37


அல்லாஹ் இந்த வசனத்தில் தக்வாவின் முக்கியத்துவத்தை தெளிவாக சொல்கிறான். 


நாம் எத்தனை ஆடு, மாடு, ஒட்டகங்களை குர்பானி கொடுத்தாலும், மிகப்பெரிய பிராணிகளை குர்பானி கொடுத்தாலும் அதன் மூலமாக நன்மைகளை பெற வேண்டுமென்றால் தக்வா மிகவும் அவசியம். தக்வா இல்லாத குர்பானிகள் அல்லாஹ்விற்கு தேவையில்லை என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.


 பிரார்த்தனையில்


பிரார்த்தனை என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான வணக்க வழிபாடு. 


ஏனென்றால் பிரார்த்தனைகள் 'மனிதன் அல்லாஹ்விற்கு அடிமை' என்பதை தெளிவாக காட்டும் ஒரு அம்சமாகும். அப்படிப்பட்ட பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வின் அச்சம் வேண்டும் என்று இறைவன் கூறுகிறான்.


وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ


பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதைச் சீர்கெடுக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. திருக்குர்ஆன்  7:56.


இந்த வசனத்தில் அச்சத்துடன்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு சொல்லிக்காட்டுகிறான். அச்சம் என்பது தக்வாவின் ஒரு பகுதி என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆக பிரார்த்தனை என்ற முக்கிய வணக்கத்திற்கும் தக்வா அவசியம்.


தொழக்கூடிய பள்ளி


நாம் தொழக்கூடிய பள்ளிவாசலும் தக்வாவின் (அல்லாஹ்விற்கு பயந்து பாவத்திலிருந்து விடுபடுதல்) அடிப்படையில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களாக இருக்க வேண்டும். பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்கு இணைவைக்கக்கூடிய ஹராமான காரியங்கள் நடந்தால் அந்த பள்ளிவாசல்களில் தொழக்கூடாது.


لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ


அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் தக்வாவின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். திருக்குர்ஆன்  9:108


இந்த வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் பேசுகிறான். தக்வாவின் அடிப்படையில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தொழ வேண்டும் என்று கட்டளையிடுகிறான். ஆகவே நாமும்  இணைவைக்காத பள்ளிவாசல்களில்தான் தாெழ வேண்டும். 


இந்த வசனம் இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்பதை குறிக்கவில்லை. மாறாக இணைவைப்பு நடக்கும் பள்ளயிலே தொழக்கூடாது என்பதைத்தான் குறிக்கிறது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தான் மக்களுக்கு இமாமாக நின்று தொழ வைப்பார்கள். அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களை தொழக்கூடாது என்று இறைவன் கட்டளையிடுவதிலிருந்த இந்த வசனம் இமாமிற்கு பின்னால் நின்று தொழுவதை குறிக்கவில்லை. மாறாக பள்ளிவாசலில் நின்று தொழுவதைத்தான் குறிக்கிறது என்பது விளங்குகிறது.


ஆக பள்ளிவாசல் என்ற புனித தலமாக இருந்தாலும் அவை தக்வாவோடு கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதிலிருந்து தக்வாவின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.


நிர்வாகி


அதைப் போன்று பள்ளிவாசல்களை நிர்வகிக்கக்கூடிய நிர்வாகிகளுக்கு தக்வா மிகவும் அவசியம்.


إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ


அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். திருக்குர்ஆன்  9:18


'அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் இருப்பவர்கள்தான்' பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். 


 அதே போன்று மஸ்ஜிதுல் ஹரம் என்ற மக்காவின் புனித பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதியானவர் யார்? என்பதையும் அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்.


وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوا أَوْلِيَاءَهُ ۚ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ


மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) தக்வா உடையோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன்  8:34


தக்வா இருந்தால்தான் மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிக்கக்கூடிய தகுதி வரும் என்ற அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து தக்வாவின் முக்கியத்துவத்தை அறியலாம்.


தக்வாவை கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்


அதே போல் நாம் செய்யக்கூடிய ஒட்டுமொத்த அமல்களையும் அல்லாஹ் ஒரு கட்டிடத்திற்கு உவமையாக்கி சொல்லிக்காட்டுகிறான்.


أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ تَقْوَىٰ مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَم مَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ


அல்லாஹ்வைப் பற்றிய தக்வாவின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.   திருக்குர்ஆன்  9:109


இந்த வசனத்தின் அடிப்படையில் நம்முடைய வணக்க வழிபாடுகள் இரண்டு விஷயங்களை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். 


ஒன்று தக்வா 


இரண்டாவது ரிழ்வான் (அல்லாஹ்வின் திருப்தி). 


இந்த இரண்டும் அமையப் பெற்ற அமல்கள்தான் நமக்கு நன்மையை பெற்று தரும். ஆக இந்த அளவிற்கு தக்வா என்பது மிக முக்கியமானது.


நன்மையென்றாலே தக்வாதான்


அதுமட்டுமில்லாமல் அல்லாஹ் இன்னாெரு வசனத்தில் "நன்மை என்றாலே அது தக்வா தான்" என்பதை சாெல்லிக்காட்டுகிறான்.


يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ ۗ وَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰ ۗ وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ


பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று. தக்வா கொள்வதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள். திருக்குர்ஆன்  2:189


இந்த வசனத்தில் தக்வா இருந்தால் தான் நன்மையை பெற முடியும் என்று அல்லாஹ் தெளிவாக சொல்கிறான். 


ஆக முஸ்லிமாக வாழக்கூடியவன் கட்டாயமாக தக்வாவை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் நன்மையை பெற முடியும். நன்மையை பெற்றால்தான் சொர்க்கத்திற்கு செல்ல முடியும்.


உள்ளத்தை தான் பார்ப்பான்


நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளும் இதற்கு சான்று பகிர்கின்றன.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் :   5012


இந்த பென்மொழியில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தக்வாவின் முக்கியத்துவத்தை தெளிவாக கூறுகிறார்கள். 


ஒரு மனிதன் மிக அழகானவனாக இருந்தாலும் நல்ல உடலமைப்பை பெற்றிருந்தாலும் அதன் மூலம் எந்த பலனுமில்லை. மாறாக அவன் செய்யக்கூடிய நல்ல செயல்பாடுகளுக்கும் அவனுடைய நல்ல உளளத்திற்கும் தான் அவன் பலனை பெற்றுக் கொள்வான்.


நல்ல உள்ளம் என்றால் அது தக்வாவை பெற்ற உள்ளம் தான். அல்லாஹ் நம்முடைய உள்ளத்தில் தக்வா இருக்கிறதா இல்லையா என்பதைத்தான் பார்ப்பான்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 5010


இதிலிருந்து தக்வா என்பது ஒரு முஸ்லிமுக்கு மிக மிக அவசியம் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஒரு மனிதனுடன் அவனுடைய நிழல் எப்படி இருக்குமோ அது போல முஸ்லிமுடன் தக்வா இருக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய அமல்கள் ஏற்றுக்காெள்ளப்பட்டு அதற்கான கூலிகள் வழங்கப்பட்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியும்.


தக்வா இருந்தால் தான் நேர்வழி


தக்வா என்பது அனைத்து வணக்க வழிபாட்டிலும் இருக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். அதேபோன்று தக்வா இருந்தால் தான் நமக்கு நேர்வழி கிடைக்கும் என்றும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.


நேர்வழி காட்டும் அம்சம்


♦ திருக்குர்ஆன்


திருமறையை மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அருளினான். அல்லாஹ் சொல்வதை பாருங்கள்.


இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். திருக்குர்ஆன்  2:185


திருமறைக்குர்ஆன் நேர்வழி காட்டும் என்று அல்லாஹ் சொல்கிறான். உண்மையையும் பொய்யையும் பிரித்துக்காட்டும் என்றும் சொல்கிறான். 


திருமறைக்குர்ஆன் நேர்வழி காட்டும் என்றால் திருமறையை படித்த அத்துனை பேரும் நேர்வழியில் இருக்க வேண்டும். ஆனால் திருமறையை படித்த அத்தனை பேரும் நேர்வழியில்தான் உள்ளார்களா? திருமறையை நன்கு கரைத்து குடித்த எத்தனையோ பேர் நேர்வழியிலிருந்து தவறி வழிகேட்டில் பயணிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. 


இருபது முப்பது வருடங்களாக திருமறையை கரைத்து குடித்த பல உலமாக்கள், பல அறிஞர்கள் பள்ளிகளில் அமர்ந்து மவ்லீத் ஓதுவதும், தர்காக்களை ஆதரிப்பதும் என்பதுபோன்ற பல்வேறு இணைவைப்பான காரிங்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் திருமறையை படித்தும் நேர்வழியில் பயணிக்கவில்லை. அப்படியென்றால் அல்லாஹ் சொன்னது தவறா? நிச்சயமாக இல்லை.


ஏனென்றால், திருமறையை படிப்பவர்களுக்கு நேர்வழி கிடைக்கும் என்று சொன்ன அல்லாஹ், எப்படி படித்தால் நேர்வழி கிடைக்கும்? என்பதையும் சேர்த்தே சொல்லிக்காட்டுகிறான். கீழேயுள்ள திருமறையை படியுங்கள்.


وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

இது(திருக்குர்ஆன்) தக்வாவை பெற்றவர்களுக்கு அறிவுரை. திருக்குர்ஆன்  69:48


இநத வசனத்தில் அல்லாஹ் தெளிவாக சொல்லிக்காட்டுகிறான். திருமறையை யாரெல்லாம் படிக்கிறார்களோ, அவர்களுக்கல்லாம்  நேர்வழி கிடைக்காது. மாறாக திருமறையை யார் தக்வாவோடு படிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் நேர்வழி கிடைக்கும் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.


 இன்னொரு வசனத்தையும் பாருங்கள்.


இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) தக்வாயுடையவர்களுக்கு (இது) வழிகாட்டி. திருக்குர்ஆன்  2:2


ஆக, நமக்கு திருமறை நேர்வழி காட்ட வேண்டுமென்றால் நமக்கு தக்வா அவசியம். தக்வா இல்லாமல் திருமறையை படித்தால் அது அவர்களுக்கு பயன்தராது. 


மேலும் தக்வா இல்லாமல் வேதத்தை படித்தவர்களுடைய நிலையையும் அல்லாஹ் திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.


வேதக்காரர்கள்


مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا ۚ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ


தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு 

அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். திருக்குர்ஆன்  62:5


தக்வா என்றால் அல்லாஹ்விற்கு அஞ்சி அவன் தடுத்த ஹராமான விஷயங்களிலிருந்து விலகி நரகத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்தல் என்று பார்த்திருக்கிறோம். அந்த அடிப்படையில் வேதக்காரர்கள் வேதத்தை படித்தார்கள் ஆனால் அதிலுள்ளபடி நடக்கவில்லை (தக்வா இல்லை). ஆகவே அவர்களுக்கு வேதம் நேர்வழி காட்டவில்லை. ஆகவேதான் அவர்களை அல்லாஹ் கழுதை என்கின்றான்.


அதே போல் இன்னொரு வசனத்தையும்பாருங்கள்.


வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் 

சிந்திக்க வேண்டாமா?  திருக்குர்ஆன்  2:44


இதிலும் வேதக்காரர்கள் தக்வா இல்லாமல் வேதத்தை படித்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நேர்வழி கிடைக்கவில்லை என்று அல்லாஹ் சொல்கிறான். அவர்களை சிந்தனையற்றவர்கள் என்கின்றான்.


ஆக இதிலிருந்து வேதங்கள் நமக்கு நேர்வழி காட்டவேண்டும் என்றால் தக்வா மிகவம் அவசியம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.


தக்வா இருந்தால்தான் சொர்க்கம்


தக்வா ஒரு முஸ்லிமிற்கு மிக மிக அவசியம் என்பதற்கு கீழுள்ள நபிமொழியும் ஆதாரமாகும்.


அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது :


"நபி (ஸல்) அவர்களிடம், 'மக்களை சொர்க்கத்தில் அதிகம் சேர்ப்பது எது?' என்று கேட்கப்பட்டது. 


அதற்கு அவர்கள், தக்வாவும் நல்லொழுக்கமும்' என்று கூறினார்கள். 


மேலும், 'மக்களை நரகத்திற்கு இட்டுச் செல்வது எது?' என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. 


அதற்கு அவர்கள் : வாய் மற்றும் பிறப்புறுப்பு' என்று கூறினார்கள்."


சுனன் இப்னு மாஜா 4246, திர்மிதீ 2004


மேற்கூறிய நபிமொழி ஒரு முஸ்லிமை தக்வாதான் சொர்க்கத்தில் சேர்க்கும் என்பதை அறிவிக்கிறது. 

ஆட்சியாளர் தக்வாவை போதிக்க வேண்டும்


அதனால்தான் ஒரு ஆட்சியாளர் தனது குடிமக்களுக்கு தக்வாவைப் போதிக்க வேண்டும் என்று நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


ஆட்சித் தலைவர் ஒரு கேடயமே ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர்மீது(ம்) சாரும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3756. 


மேற்கூறிய அனைத்து செய்திகளும் முஸ்லிம்களுக்கு தக்வா மிக மிக அவசியம் என்பதை அறிவிக்கிறது.





பாகம் 5 - தக்வாதாரியாக மாறுவது எப்படி?


தக்வா என்றால் என்ன? தக்வாவின் முக்கியத்துவம் என்ன? என்பன போன்ற தகவல்களை அறிந்துகாெண்டோம். அடுத்ததாக தக்வாதாரியாக நாம் மாறுவது எப்படி? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.


வேதத்தை பலமாக பிடித்துக் கொள்ளுதல்


அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான் 


وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏


இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, “தூர்“ மலையை உங்கள் மேல் உயர்த்தி, “நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் தக்வாதாரியாக ஆவீர்கள்” (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்). (அல்குர்ஆன் : 2:63)


وَاِذْ نَـتَقْنَا الْجَـبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْۤا اَنَّهٗ وَاقِعٌ  بِهِمْ‌  خُذُوْا مَاۤ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏


நாம் (தூர் ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, “நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் தக்வாதாரியாக ஆகலாம்” (என்று கூறினோம்). (அல்குர்ஆன் : 7:171)


இவ்வசனங்களில் அல்லாஹ் மூஸா நபியின் சமுதாயத்தைப் பற்றி குறிப்பிட்டுக்காட்டுகிறான். 


அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதத்தை அவர்கள் பற்றிப் பிடித்துக்கொண்டால், அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக்காெண்டால், அதிலுள்ளவற்றை சிந்தித்துப்பார்த்தால் அவர்கள் தக்வாதாரியாக மாறிவிடுவார்கள் என்பதை அல்லாஹ் இங்கு தெரியப்படுத்துகிறான்.


 இது நமக்கும் பொருந்தும். அல்லாஹ் நமது சமுதாயத்திற்கு அற்புதமாக திருமறையை வழங்கியிருக்கிறான். திருமறையில் மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தும் உள்ளது. 


நாம் இத்திருமறையை தினமும் அர்த்தத்துடன் படிக்கக்கூடியவர்களாக, அதிலுள்ளவற்றின் அடிப்படையில் நடக்கக்கூடியவர்களாக, அவற்றை மனனம் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நாம் தக்வாதாரியாக மாறிவிடலாம். 


நாம் எந்த அளவிற்கு திருமறையோடு தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறோமா அந்த அளவிற்கு தக்வா நம்மிடத்தில் ஏற்படும்.


இதை இன்னோரு வசனத்திலும் இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்.


وَالَّذِىْ جَآءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖۤ‌ اُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏


அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - தக்வாவை உடையவர்கள் ஆவார்கள்.

(அல்குர்ஆன் : 39:33)


மேற்கூறிய வசனத்தில் திருமறைக்குர்ஆன் எனும் உண்மையை மக்களிடம் கொண்டு சேர்த்த முஹம்மது நபியையையும் அத்திருமறையை ஏற்று நடப்பவர்களும்தான் உண்மையான தக்வாவை உடையவர்கள் என்று அல்லாஹ் தெரிவிக்கிறான். ஆகவே நமக்கு தக்வா வேண்டும் என்றால் திருமறையோடு உடலாலும் உள்ளத்தாலும் தொடர்புடையவர்களாக நாம் இருக்க வேண்டும்.


மேலும் நமக்கு 'திருமறையின் மூலமாக தக்வா கிடைக்க வேண்டும்' என்பதற்காக ஒவ்வொரு சட்டத்தையும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறிக்காட்டுவதாக அல்லாஹ் தெரிவிக்கிறான்.


اُحِلَّ لَـکُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَآٮِٕكُمْ‌ هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ  عَلِمَ اللّٰهُ اَنَّکُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَکُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فَالْـــٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا کَتَبَ اللّٰهُ لَـكُمْ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ‌ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ‌ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْـتُمْ عٰكِفُوْنَ فِى الْمَسٰجِدِ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا  كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏


நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்; அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்; இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து தக்வாதாரியாக ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய ஆயத்துக்களை தெளிவாக்குகின்றான்.

(அல்குர்ஆன் : 2:187)


நோன்பு காலங்களில் தங்களது மனைவிடத்தில் உடலுறவு கொள்வது தொடர்பாக சஹாபாக்கள் மத்தியில் எழுந்த பிரச்சனை தொடர்பாக இவ்வசனம் பேசுகிறது. 


அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக இறைவன் இச்சட்டத்தை விளக்கமாக கூறுகிறான். 


நோன்பு காலங்களில் எப்பொழுது மனைவியிடத்தில் கூடுவதற்கு அனுமதி உண்டு? 

எதிலிருந்து எது வரை உடலுறவு கொள்ளக்கூடாது? 

இஃதிகாப் இருப்பவர் மனைவியிடத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? 


போன்ற பல சந்தேகங்களுக்கு ஒரே வசனத்தில் தெளிவான தீர்வை இறைவன் சொல்லிக்காட்டுகிறான். 


ஏனெனில் தெளிவான விளக்கங்கள் நம்மை தக்வாதாரியாக மாற்றும். ஆகவேதான் தெளிவாக கூறியிருப்பதாக இறைவன் சொல்லிக்காட்டுகிறான்.


திருமறைக் குர்ஆன் சட்டத்தை தெளிவாக்கிக் கூறுகிறது. ஆகவே அவற்றை நாம் படித்தால் நாம் தக்வாதாரியாக மாறலாம்.


நோன்பு நோற்றல்


அதைப்போல் நோன்பு நோற்பதும் நம்மை தக்வாதாரியாக மாற்றும்.


يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏


ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தக்வாதாரியாக ஆகலாம் (அல்குர்ஆன் : 2:183)


நோன்பானது முஹம்மது நபியின் சமுதாயமான நமக்கு மட்டும் கடமையாக்கப்பட்ட வணக்கமல்ல. அது முன்னால் வாழ்ந்த சமுதாயத்தவர்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்த வணக்கவழிபாடு. 


அனைத்து சமுதாயத்திற்கும் இறைவன் ஏன் நோன்பை கடமையாக்கினான்? முன் வாழ்ந்த சமுதாயத்தவர்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம் என்ன?


காரணம் ஒன்றுதான். அனைவரும் தக்வாவைப் பெற வேண்டும் என்பதுதான் ஒரேகாரணம். ஏனெனில் நோன்பானது தக்வாவை பெற்று தரும் மிகச்சிறந்த ஒரு ஊடகம்.


நாம் ஹலாலான முறையில் சம்பாதித்து வாங்கிய உணவும் குளிர்பானங்களும் நம்முன்னால் இருக்கும். ஆனால் சூரியன் மறைகின்ற வரையில் அதை உண்ணவோ பருகவோ மாட்டோம். நாம் ஹலாலான முறையில் சொந்தமாக்கிய மனைவி நம்முன் இருப்பாள். ஆனால் அவளிடத்தில் நாம் உடலுறுவு வைத்துக்காெள்ள மாட்டோம். காரணம் நோன்பு.


நோன்பு காலங்களில் நமக்கு ஹலாலான விஷயங்களை தவிர்ந்திருப்பதற்கு இறைவன் பயிற்சியளிக்கிறான். ஹலாலான சம்பாத்தியத்தில் உள்ள உணவையும் பானத்தையும் புறக்கணித்தால் ஹராமான உணவின் பக்கமோ பானத்தின் பக்கமோ நாம் செல்லமாட்டோம். இதுதான் நோன்பின் தாத்பரியம்.


ஹலாலான முறையில் மணமுடித்த மனைவியிடம் நெருங்காத நாம் தவறான முறையில் விபச்சாரத்தின் பக்கம் நெருங்குவோமா? 


தீமைகளிலிருந்து விலகுவதற்கான சிறந்த பயிற்சிமுறைதான் நோன்பு. ஆகவே நோன்பு நம்மை தக்வாதாரியாக மாற்றும் ஒரு வணக்கவழிபாடாக அமைந்துள்ளது.


நேர்வழியில் நடத்தல்


திருமறையைப் படித்தால் மட்டும்பாேதாது. அதிலுள்ளவாறு நடக்கவும் வேண்டும். ஏனெனில் நேர்வழியின் மூலஊற்றுகளே திருமறையும், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளான ஹதீஸ்களும்தான்.


وَاَنَّ هٰذَا صِرَاطِىْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ‌  وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ‌  ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏


நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) தவ்வாதாரியாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (அல்குர்ஆன் : 6:153)


இந்த வசனத்தில் தக்வாதாரியாக ஆவற்கான வழியை இறைவன் கூறுகிறான். நேர்வழியை பின்பற்றினால் நம்மால் தக்வாவை பெற்றுக் கொள்ளமுடியும் என்று போதனை செய்கிறான். ஆகவே நாம் எந்த அளவிற்கு நேர்வழியை பின்பற்றி நடக்கிறோமோ அந்த அளவிற்கு நம்மில் தக்வா ஏற்படும்.


இதை இன்னொரு வசனத்திலும் இறைவன் குறிப்பிடுகிறான். 


وَالَّذِيْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَّاٰتٰٮهُمْ تَقْوٰٮهُمْ‏


மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.  (அல்குர்ஆன் : 47:17)


நாம் நேர்வழியில் நடக்க நடக்க நம்மிடத்தில் தக்வா வளர்ந்து கொண்டே செல்லும்.

வணக்கம் புரிதல்


இறைவன் கடமையாக்கிய வணக்க வழிபாட்டை சரிவர கடைபிடிப்பதும் தக்வாவை பெறுவதற்கான வழியாக இருககிறது.

 

இறைவன் கூறுகிறான் :


يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏


மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம். (அல்குர்ஆன் : 2:21)


இவ்வசனத்தில் நம்மை படைத்த இறைவனை மட்டும் வணங்குமாறு அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வை நாம் சரியாக வணங்கினால் நம்மால் தக்வாவை பெற முடியும் என்றும் அவன் வழிகாட்டுகிறான். அதனால் ஒவ்வொரு வழிபாட்டின் பயனாகவும் தக்வா வயே இறைவன் கூறிக்காட்டுகிறான்.


கியாமத் நாளைப்பற்றி அறிதல்


يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ‌ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيْمٌ‏


மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.

(அல்குர்ஆன் : 22:1)


கியாமத் நாள் தொடர்பாக குர்ஆனும் ஹதீஸ்களும் குறிப்பிட்டுக்காட்டிய விஷயங்களை நாம் சிந்தித்துப் பார்த்தால் நம்முடைய உள்ளத்தில் இறைவனைப் பற்றிய அச்சம் தொற்றிக் கொள்ளும். நாம் பாவமான காரியங்களில் ஈடுபட முனைய மாட்டோம்


ஆகவே மறுமை நாளைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதும் நம்மிடத்தில் தக்வாவை ஏற்படுத்தும்.


பிரார்த்தனை செய்தல்


அதைபோல் நமக்குத் தக்வாவைப் பெற்றுத்தரும் முக்கியமான வழிமுறை இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வதாகும்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினா" என்று பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் தக்வாவையும் சுய கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.)

ஸஹீஹ் முஸ்லிம் : 5265. 


மேற்கூறிய பிரார்த்தனையில் தக்வாவை இறைவனிடத்தில் கேட்குமாறு நபிகளார் வழிகாட்டியிருக்கிறார்கள். இதை பிற சந்தர்பங்களிலும் நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.


அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்று முறை தக்பீர் ("அல்லாஹு அக்பர்") கூறுவார்கள். பிறகு "சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்" என்று கூறுவார்கள்.

(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா,இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: "ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்" (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்).

ஸஹீஹ் முஸ்லிம் : 2612. 


நபிகளார் பிரயாணம் சென்றால் அப்போதும் தக்வாவைக் கேட்டு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.


பிரயாணம் செய்பவர் தக்வாவை பிரார்த்தனைமூலம் கேட்க வேண்டும் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.


அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'யா ரசூலல்லாஹ்! நான் ஒரு பயணத்திற்குச் செல்ல விரும்புகிறேன். எனவே எனக்குப் பயணப்பாதையை (நல்லுபதேசத்தை) அளியுங்கள்' என்று கேட்டார்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'அல்லாஹ் உனக்கு இறையச்சத்தை (தக்வாவை) பயணப்பாதையாக தருவானாக.'


அந்த மனிதர், 'இன்னும் அதிகமாகக் கூறுங்கள்' என்று கேட்டார்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'மேலும், உன் பாவங்களை அவன் மன்னிப்பானாக.'


அந்த மனிதர், 'என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இன்னும் அதிகமாகக் கூறுங்கள்' என்று கேட்டார்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'மேலும், நீ எங்கிருந்தாலும் நன்மையை உனக்கு எளிதாக்குவானாக.'"


ஜாமி அத்-திர்மிதி 3444


எனவே நமக்கு தக்வா ஏற்படுதவற்காக நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நபிவழியை பற்றிப்பிடித்தல்


நாம் தக்வாதாரியாக மாற வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் திருத்தூதர்களை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறான்.


அல்லாஹ் கூறுகிறான் :


فَاَرْسَلْنَا فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌  اَفَلَا تَتَّقُوْنَ‏


அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். “அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை; நீங்கள் (அவனுக்கு) தக்வாவோடு நடந்து கொள்ள வேண்டாமா?” (என்றும் அவர் கூறினார்.)  

(அல்குர்ஆன் : 23:32)


இறைத்தூதர்களின் முக்கிய பணி, மக்களை தக்வாதாரியாக மாற்றுவதுதான் என்பது இதிலிருந்து புலப்படுகிறது. ஆகவே நாம் தக்வாதாரியாக மாற வேண்டுமானால் இறைத்தூதர் காட்டித்தந்த வழியைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.


ஆக நபிவழியில் நடந்தால்தான் நமக்குத் தக்வா வரும்.



























பாகம் 6 - தக்வா உடையோருக்கு ஏற்படும் பயன்கள்


பாவங்கள் அழிக்கப்படும், நன்மை தீமையைப் பிரித்தரியும் ஆற்றல் வரும்


நாம் மறுமையில் சுவனம் செல்ல வேண்டுமானால் நேர்வழியில் நடக்க வேண்டும். 


அதற்கு முன்னால் நன்மை எது? தீமை எது? என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நல்வழியில் நடந்து சொர்க்கம் செல்வோம். தீயவழியில் நடக்காமல் தவிர்ந்து கொள்வோம்.


இத்தகைய பாக்கியத்தை தக்வா நமக்குப் பெற்றுத்தரும்.


அல்லாஹ் கூறுகிறான் :


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّـكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ وَ اللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏


ஈமான் கொண்டவர்களே! நீங்கள் தக்வாவோடு நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.

(அல்குர்ஆன் : 8:29)


தக்வா இருந்தால் நமக்கு நேர்வழி கிடைக்கும். நன்மையையும் தீமையையும் பிரித்தறியக்கூடிய ஆற்றல் வரும்.


அதைப்போல் நாம் செய்த பாவத்தையும் இறைவன் மன்னிப்பான். 


ஆக நமக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?



சுவனம் கிடைக்கும்


தக்வாதாரிகளுக்கு இறைவன் வழங்கும் பரிசுதான் சுவனம். இதை இறைவன் பல்வேறு வசனங்களில் தெரிவிக்கிறான்.


அல்லாஹ் கூறுகிறான் :


مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ‌  تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌  اُكُلُهَا دَآٮِٕمٌ وَّظِلُّهَا‌  تِلْكَ عُقْبَى الَّذِيْنَ اتَّقَوْا‌ ‌  وَّعُقْبَى الْكٰفِرِيْنَ النَّارُ‏


தக்வாதாரிகளுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை; இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.

(அல்குர்ஆன் : 13:35)


قُلْ اَذٰ لِكَ خَيْرٌ اَمْ جَنَّةُ الْخُـلْدِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ ‌ كَانَتْ لَهُمْ جَزَآءً وَّمَصِيْرًا‏ لَّهُمْ فِيْهَا مَا يَشَآءُوْنَ خٰلِدِيْنَ‌  كَانَ عَلٰى رَبِّكَ وَعْدًا مَّسْــــٴُـوْلًا‏



அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது தக்வாதாரிகளுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறும்.


“அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.”

(அல்குர்ஆன் : 25:15, 16)


وَالَّذِىْ جَآءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖۤ‌ اُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏

 لَهُمْ مَّا يَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ‌  ذٰ لِكَ جَزٰٓؤُ الْمُحْسِنِيْنَ ‏


அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - தக்வாவை உடையவர்கள் ஆவார்கள்.


அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது; இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.

(அல்குர்ஆன் : 39:33, 34)

 

مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ‌ فِيْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَيْرِ اٰسِنٍ‌  وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهٗ ‌ وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِيْنَ  وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى‌  وَلَهُمْ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ‌ كَمَنْ هُوَ خَالِدٌ فِى النَّارِ وَسُقُوْا مَآءً حَمِيْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ‏


பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

(அல்குர்ஆன் : 47:15)


وَلَوْ اَنَّهُمْ اٰمَنُوْا وَاتَّقَوْا لَمَثُوْبَةٌ مِّنْ عِنْدِ اللّٰهِ خَيْرٌ ‌ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ‏

அவர்கள் நம்பிக்கை கொண்டு தக்வாவோடு நடந்து கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்; இதனை அவர்கள் அறிய வேண்டாமா?


(அல்குர்ஆன் : 2:103)


தக்வாதாரிகளுக்கு சிறப்பான சொர்க்கங்களும் இன்பங்களும் கிடைக்கும் என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் தெரிவிக்கின்றன 


பாவம் அழியும், அதிக கூலி கிடைக்கும்


நாம் தக்வாவோடு நடந்து கொண்டால் நாம் செய்த பாவத்தை இறைவன் மன்னித்துவிடுவான். அதே சமயம் நாம் செய்யும் நற்காரியங்களுக்கு அதிகமான கூலியைத் தருவான்.


அல்லாஹ் கூறுகிறான் :


لِيُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِىْ عَمِلُوْا وَيَجْزِيَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏


(தக்வாதாரிகளான) அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.


(அல்குர்ஆன் : 39:35)


மேற்கூறிய வசனமே தக்வாதாரிகளின் சிறப்புக்க போதுமானதாகும்.


ஏனெனில் நாம் செய்த செயல்களில் எது மிக மிக சிறந்த செயலோ அந்த செயல்களுக்கு கிடைக்கும் நற்கூலியை மற்ற சாதாரண செயல்களுக்கும் வழங்குவதாக இறைவன் தெரிவிக்கிறான். 


இது எவ்வளவு பெரிய அருட்கொடை!


தக்வாதாரிகளுடன் அல்லாஹ் இருக்கிறான்


அதைப்போல் தக்வாதாரிகளுக்கு கிடைக்கும் மாபெரும் பாக்கியம் இறைவனின் நெருக்கமாகும்.


அல்லாஹ் கூறுகிறான் :


اَلشَّهْرُ الْحَـرَامُ بِالشَّهْرِ الْحَـرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌ‌ فَمَنِ اعْتَدٰى عَلَيْكُمْ فَاعْتَدُوْا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدٰى عَلَيْكُمْ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏


(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் தக்வாதாரிகளுடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் : 2:194)


اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ‏

நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.

(அல்குர்ஆன் : 16:128)


அல்லாஹ் நம்முடன் இருந்தால் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை. நமது காரியங்களை அல்லாஹ் நமக்கு இலேசாக்கித்தருவான். அனைத்து காரியங்களிலும் நமக்கு வெற்றியைத் தருவான்.


இறைநேசம் கிடைக்கும்


உலகில் வாழும் நாம் பிறரது அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனின் அன்பை பெற நாம் முயற்சிப்பதில்லை.


இறைவனின் அன்பு தூய்மையானது. அதற்கு இணை கிடையாது. இறைவனின் அன்பைப் பெற்றவருக்கு வேறெதுவும் தேவையில்லை.


அப்படிப்பட்ட இறையன்பை தக்வா பெற்றுத்தரும்.


சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் இறையச்சமுள்ள, போதுமென்ற மனமுடைய, (குழப்பங்களிலிருந்து) ஒதுங்கி வாழ்கின்ற அடியானை நேசிக்கின்றான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 5673. 



புண்ணியம் கிடைக்கும்


யாரிடத்தில் தக்வா இருக்கிறதோ அவர்தான் புண்ணியவாதி. அவருக்குத்தான் நன்மைகள் விளையும்.


இதை அல்லாஹ் தனது திருமறையில் தெரிவிக்கிறான்.


يَسْـــٴَــلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ‌ قُلْ هِىَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ  وَلَيْسَ الْبِرُّ بِاَنْ تَاْتُوا الْبُيُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰى‌ وَاْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّکُمْ تُفْلِحُوْنَ‏‏‏


(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் தக்வாவோடு நற்செயல் புரிவோரே புண்ணியமுடையோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் : 2:189)


தக்வா இருப்பவர்தான் புண்ணயமுடையோர் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெரிவிக்கிறான்.

காரியங்கள் சீராகும்


நம்மிடத்தில் தக்வா இருந்தால் நமது காரியம் சீராகும். 


அல்லாஹ் கூறுகிறான் :


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا 

ۙ‏يُّصْلِحْ لَـكُمْ اَعْمَالَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا‏


ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.

(அல்குர்ஆன் : 33:70, 71)


நாம் தக்வாவோடு நடந்து கொண்டால் நமது காரியங்கள் அனைத்தும் நேர்த்தித் தன்மையோடு இருக்கும்.


நரகை கடக்கும் பாக்கியம்


மறுமைநாளில் இறைவனின் விசாரணை முடிந்த பிறகு அனைவரும் நரகத்தைக் கடக்க வேண்டும்.


பாவிகள் நரகை கடக்க முடியாமல் நரகில் விழுந்து வேதனை அனுபவிப்பர். தக்வாதாரிகளே நரகத்தைக் கடப்பார்கள்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا ‌ كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا‌ ‏


மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.


அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.

(அல்குர்ஆன் : 19: 71,72)


மேற்கூறிய வசனத்தில் தக்வாவுடன் நடந்து கொண்டவர்கள் நரகத்தை எளிமையாகக் கடந்து விடுவதாக இறைவன் தெரிவிக்கிறான்.


இதை இன்னொரு வசனத்தில் கூறும்போது,


وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏

ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.

(அல்குர்ஆன் : 92:17)


தக்வாதாரிகளுக்கு நரகம் வெகு தொலைவில் இருக்கும். அவர்கள் நரகத்தின் அருகில் கூட செல்லமாட்டார்கள் என்பதை மேற்கண்ட வசனம் தெரிவிக்கிறது.


பாக்கியத்திலேயே மிகப்பெரும் பாக்கியம் இதுதான்.


இம்மையிலும் மறுமையிலும் நன்மை கிடைக்கும்


தக்வாவோடு இருப்பவர்களுக்கு இம்மையிலும் நன்மை விளையும். மறுமையிலும் நன்மை விளையும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَقِيْلَ لِلَّذِيْنَ اتَّقَوْا مَاذَاۤ اَنْزَلَ رَبُّكُمْ‌ قَالُوْا خَيْرًا لِّـلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ‌   وَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ ‌  وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِيْنَۙ‏


தக்வாதாரிகளிடம், “உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “நன்மையையே (அருளினான்)” என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு; இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும், பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது!

(அல்குர்ஆன் : 16:30)


தக்வாவோடு நடந்து கொண்டால் ஈருலகிலும் வெற்றி பெறலாம் என்பதை மேற்கண்ட வசனம் தெரிவிக்கிறது.



அல்லாஹ்விடத்தில் கண்ணியம் உண்டு


இவ்வுலகில் பிற மனிதர்களிடம் நாம் கண்ணியத்தை எதிர்பார்க்கிறோம். அது சில நேரங்களில் உண்மையாகவும் பல நேரங்களில் போலியாகவும் கிடைக்கும்.


ஆனால் உண்மையிலேயே சிறந்த கண்ணியம் என்றால் அது அல்லாஹ்விடத்தில் பெறும் கண்ணியம்தான். அது முழுக்க முழுக்க தூய்மையானதாகவும் சிறந்ததாகவும் இருக்கும். அத்தகைய கண்ணியத்தை தக்வா பெற்றுதரும்.


அல்லாஹ் கூறுகிறான் :


يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌  اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌  اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏


மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.

(அல்குர்ஆன் : 49:13)


சமுரா பின் ஜுன்துப் ரலி அறிவிப்பதாவது :


குலப்பெருமை என்பது செல்வம் (எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து கணக்கிடப்படுகிறது. ஆனால் உண்மையான) கண்ணியம் என்பது தக்வாதான்.


இப்னுமாஜா 4219


மேற்கூறிய குர்ஆன் வசனமும் நபிமொழியும் தக்வாதாரிகளுக்கு இறைவனின் கண்ணியம் கிடைக்கும் என்பதை தெரிவிக்கிறது.



நன்மைகள் விளையும்


நாம் தக்வாவோடு நடந்தால் அது நமக்கு நன்மையைத் தான் பெற்றுத்தரும் என்பதை நபியவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.


அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்கள் :


இன்று என்னிடம் ஒருவர் வந்து, ஒரு விஷயத்தைக் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. அவர், 'ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்கிறார். அப்போது தலைவர் அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி (வற்புறுத்தி) அவருக்கு உத்தரவிடுகிறார் எனில் அவர் என்ன செய்வது?' என்று கேட்டார். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன(பதில்) சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய புனிதப் போர்களில்) நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறை தான் உத்தரவிடுவார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும் வரை நன்மையில் இருப்பீர்கள். (நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சித் தலைவருக்குக் கீழ்ப்படிவதால் தீங்கேதும் நேராது.) உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக்கூடும். (இனிவரும் காலங்களில்) அத்தகைய (தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக் கூடும். எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரும் இல்லையோ அவன் மீதாணையாக! இந்த உலகத்தில் போனது போக எஞ்சியிருப்பவற்றை, தூய நீர் குடிக்கப்பட்டு கசடுகள் மட்டும் எஞ்சி (தேங்கி நின்று)விட்ட ஒரு குட்டையாகவே கருதுகிறேன்' என்று கூறினேன். 

ஸஹீஹ் புகாரி : 2964. 


நாம் தக்வாவோடு ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்டு நடந்தால் அது மூலமாக நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கிறது.


இன்னொரு நபிமொழியிலும் இதை நபியவர்கள் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


ஒருவர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தானே) மணமும் முடித்தார் எனில் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என்னை நம்பினால் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும், ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானார்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பானாயின் அவனுக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும். 

என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 3446. 


இறைவனை அஞ்சி தக்வாவோடு நடந்தால் அதன்மூலம் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.




















பாகம் 7 - முத்தக்கீனின் செயல்பாடு


தக்வா என்றால் என்ன? தக்வாதாரியாக மாறுவது எப்படி? தக்வாதாரிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பவற்றை அறிந்து கொண்ட நாம், தக்வாதாரிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.


மறுமையின் சிந்தனையோடு இருத்தல்


இஸ்லாமிய நம்பிக்கைகள் முக்கியமானது மறுமையின் மீதான நம்பிக்கையாகும். அல்லாஹ் திருமறையில் மறுமையைக் குறித்து அதிகம் வலியுறுத்துகிறான்.


அந்தவகையில் ஒரு தக்வாதாரி மறுமை சிந்தனையோடு இருக்கக்கூடியவனாக இருக்க வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّـلَّذِيْنَ اتَّقَوْا ‌ اَفَلَا تَعْقِلُوْنَ‏


மறுமை வீடுதான் தக்வாதாரிகளுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?

(அல்குர்ஆன் : 12:109)


தக்வாதாரிகளுக்கு சிறந்தது மறுமையின் வீடுதான். ஆகவே ஒரு தக்வாதாரி மறுமையைப் பற்றிய சிந்தனையில் லயிக்க வேண்டும்.


மறுமை இன்பத்தில் ஆசை வைத்தல்


இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமற்றது. மறுமையே நிரந்தரமானது. மறுமையில் சொர்க்கம் என்ற இன்பமும் நரகம் என்ற தண்டனையும் இருக்கும். 


தக்வாதாரிகளுக்கு சொர்க்கத்தை பரிசளிப்பதாக அல்லாஹ் தெரிவித்துள்ளான். அந்த சொர்க்கத்தின் இன்பங்கள் அலாதியானது. ஆகவே ஒரு தக்வாதாரி தனக்கு கிடைக்கவிருக்கும் சொர்க்கத்தின் இன்பத்தில் ஆசை வைக்க வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


 قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌ‌  وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰى وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا‏


“(நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், தக்வாதாரிகளுக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”


(அல்குர்ஆன் : 4:77)


இவ்வுலக இன்பம் அற்பமானது என்றும் தக்வாதாரிகளுக்கு மறுமை இன்பமே மேலானது என்றும் இறைவன் தெரிவிக்கிறான். 


ஆகவே தக்வாதாரிகள் இவ்வுலகத்தின் அற்ப இன்பத்தில் ஆசை வைக்காமல் மறுவுலகத்தில் சிறந்த இன்பத்தில் ஆசை வைக்க வேண்டும்.


உண்மையாளர்களுடன் இருத்தல்


தக்வாவைப் பெற்றிருப்பவர்கள் தங்களது தக்வாவில் நிலைத்திருக்க வேண்டுமானால் அவர்கள் உண்மையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏


ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு தக்வாவை வழங்குங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.

(அல்குர்ஆன் : 9:119)


தக்வாதாரிகள் உண்மையாளர்களுடன் சேர்ந்து உண்மையாளர்களாக ஆகிவிட வேண்டும் என்று அல்லாஹ் தெரிவிக்கிறான்.


ஷைத்தானின் சதியிலிருந்து தப்பித்தல் 


மனிதனை வழிகெடுப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு திரிபவன் ஷைத்தான். அவன் மனிதனின் பகிரங்க எதிரியாவான். ஆகவே ஒரு தக்வாதாரி தனது எதிரியான ஷைத்தான் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ‌‏


நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்விடம்) தக்வாவோடு நடந்து கொள்கிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.

(அல்குர்ஆன் : 7:201)


ஷைத்தானின் ஊசலாட்டம் அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படும். அவன் ஆதம் நபியையே வழிகெடுத்தவன் அல்லவா! இருந்தபோதிலும் தக்வாதாரிகள் ஷைத்தானின் ஊசலாட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் அல்லாஹ்வின் நினைவைக் கொண்டு அதிலிருந்து தப்பித்துவிடுவார்கள்.


பாவத்திலிருந்து மீளுதல்


அதைப்போல் ஒரு தக்வாதாரி பாவத்தில் ஈடுபட முனையும் போது பிறர் அல்லாஹ்வைக் குறித்து நினைவூட்டினால் அவர் உடனே சுதாரித்துக் கொள்ள வேண்டும். அப்பாவத்திலிருந்து வெளிவர வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ‌ فَحَسْبُهٗ جَهَنَّمُ‌ وَلَبِئْسَ الْمِهَادُ‏


“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.

(அல்குர்ஆன் : 2:206)


இதில் நபியவர்களும் நமக்கு முன்மாதிரியாக இருந்துள்ளார்கள்.


உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்கள் :


(ஆண்கள் பட்டு அணிவது தடை செய்யப்படுவதற்கு முன்பு) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ('ஃபர்ரூஜ்' எனும்) நீண்ட பட்டு உடுப்பு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்தார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள். பிறகு (தொழுதுவிட்டுத்) திரும்பியதும் அதை வெறுப்பவர்கள் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, 'இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று' எனக் கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5801. 


ஆகவே ஒரு தக்வாதாரி ஹராமான விஷயங்களில் ஈடுபடக்கூடாது. அதன் அருகில் கூட செல்லக்கூடாது.

இஸ்லாத்தை கடைபிடித்தல்


அல்லாஹ் சில விஷயங்களை நமக்குக் கடமையாக்கியிருக்கிறான். அவற்றை ஒரு அடியான் கட்டாயம் நிறைவேற்ற வேண்டு்ம். இன்னும் சில விஷயங்களை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளான். அவற்றை செய்தால் நன்மைகள் விளையும் என்று கூறியுள்ளான். ஒரு தக்வாதாரி கடமைகளை மட்டும் செய்யாமல் நன்மையான காரியங்களையும் மேற்கொள்ள வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


لَـيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوا وَّاَحْسَنُوْا‌  وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏


ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) தக்வாவோடு நடந்தவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன் : 5:93)


ஆகவே ஒரு தக்வாதாரி பாவங்களிலிருது தவிர்ந்திருக்க வேண்வும். அதைப்போல் தன்னால் முடிந்த அளவிற்கு நன்மையான காரியங்களில் ஈடுபட வேண்டும்.

வணக்க வழிபாட்டில் வரம்பு மீறாதிருத்தல்


அதேசமயம் ஒரு தக்வாதாரி இபாதத்களில் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும். நபிகளார் எந்த அளவிற்கு இபாதத்தை கடைபிடிக்க சொன்னார்களோ அந்த அளவிற்கு கடைபிடிக்க வேண்டும்.


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 5063. 


பெரும்பாவங்களில் ஈடுபடாதோர்


நன்மைகளை செய்வதோடு பாவத்திலிருந்து விலகியிருக்கக்கூடியவர்களாக தக்வாதாரிகள் இருக்க வேண்டும். அவற்றிலும் குறிப்பாக பெரும்பாவங்களிலிருந்து கட்டாயம் விலகியிருக்க வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


اَلَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰٓٮِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ‌ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ‌ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ‌ فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ‌  هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى‏


(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போதும், நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் தக்வாதாரிகள் என்பதை அவன் நன்கறிவான்.  

(அல்குர்ஆன் : 53:32)


தக்வாதாரிகள் பெரும்பாவங்களையும் மானக்கேடான விஷயங்களையும் தவிர்ந்திருப்பார்கள் என்பதை இறைவன் தெரிவித்திருக்கிறான்.


ஒழுக்கமாக நடத்தல்


ஆகவே ஒரு தக்வாதாரி ஒழுக்கமானவனாக இருக்க வேண்டும். இதை நபியின் மனைவிக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.


يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ‏


நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் தக்வாவோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

(அல்குர்ஆன் : 33:32)


தக்வாவோடு நடப்பவர்கள் ஒழுக்கவான்களாக இருக்க வேண்டும். அந்நியருடன் பேசும் போது ஒழுக்கமாக பேச வேண்டும்.


காஃபிர்களுக்கும் முனாபிகீன்களுக்கும் கீழ்படியாமல் இருத்தல்


ஒரு தக்வாதாரி முழுக்க முழுக்க அல்லாஹ்விற்கு மட்டுமே கட்டுப்படக்கூடியவனாக இருக்க வேண்டும். அவன் ஒருபோதும் முனாஃபிகீன்களுக்கோ காஃபிர்களுக்கோ கீழ்படியக்கூடாது.


அல்லாஹ் கூறுகிறான் :


يٰۤـاَيُّهَا النَّبِىُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ‌  اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ۙ‏


நபியே! அல்லாஹ்விற்கே தக்வாவை செலுத்துவீராக! காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் : 33:1)


தவறான சிகிச்சை முறையை மேற்கொள்ளாமல் இருத்தல்


அதைப்போல் ஒரு தக்வாதாரி உலகக்காரியங்களிலும் சரியாக நடக்க வேண்டும். அதில் இறைவன் காட்டித்தந்த வழியில் நடக்க வேண்டும்.


உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார் 


உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) கூறினார்: 


நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை அஞ்சுங்கள். இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடி நாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும்' என்று கூறினார்கள். 'இந்தியக் குச்சி' எனப்து 'குஸ்த்' எனும் செய்கோஷ்டத்தைக் குறிக்கிறது. 


ஸஹீஹ் புகாரி : 5718. 


நாம் உலகக் காரியத்தில் ஏதாவது செய்வதாக இருந்தாலும் அதில் சிறந்ததையே செய்ய வேண்டும். தவறான காரியங்களில் ஈடுபடக்கூடாது. 


ஆக ஒரு தக்வாதாரி அனைத்து விஷயங்களிலும் இறைவனை அஞ்சக்கூடியவனாக இருக்க வேண்டும்.


பொறுமையை கடைபிடித்தல்


ஒரு தக்வாதாரிக்கு மிக மிக அவசியமான ஒன்று பொறுமையாகும்.


அனஸ்(ரலி) அறிவித்தார். 

அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், 'அல்லாஹ்வைப் பயந்து கொள்! பொறுமையாயிரு!' எனக் கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 1252. 


பொறுமையில்லாதவரிடத்தில் தக்வா தங்காது. ஆகவே தக்வாதாரிகள் முடிந்த அளவிற்கு அதிக பொறுமையை மேற்கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

தர்மம் கொடுத்தல்


தக்வாதாரிகள் தங்களது பொருளாதாரத்தை இறைவழியில் வாரி இறைக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :

وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى⭘ ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ⭘


தக்வா உடையவர் (நரகமாகிய) அதைவிட்டும் தூரமாக்கப்படுவார். அவர் (எத்தகையவரென்றால்) தூய்மையடைவதற்காகத் தனது செல்வத்தைக் கொடுத்தவர் ஆவார்.


(அல்குர்ஆன் 92 : 17,18)


ஆகவே தர்மம் செய்வது தக்வாவை அதிகப்படுத்தும்.


வஸிய்யத்தை நியாயமான முறையில் நிறைவேற்றுதல்


ஒரு தக்வாதாரி எதிலும் மோசடி செய்யக்கூடாது. நேர்மையான முறையில் நடக்க வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான் :


كُتِبَ عَلَيْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَيْرَا   اۨلْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ بِالْمَعْرُوْفِ حَقًّا عَلَى الْمُتَّقِيْنَ‏


உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது; (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.

(அல்குர்ஆன் : 2:180)


தக்வாதாரியாக இருப்பவர் மரண சாசனம் செய்யும் போது முறைப்படிதான் செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான். 


மரண சாசனத்திலேயே நேர்மையாக நடக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போது மற்ற காரியங்களிலும் நேர்மையாகத்தான் நடக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.


இவ்வாறு ஒரு தக்வாதாரி ஈமானில் பூரணத்துவமுடனும், இஸ்லாத்தை கடைபிடிப்பதில் முடிந்த அளவிற்கு பூரணத்துவமுடனும் நடந்து கொள்ள வேண்டும்.












பாகம் 8 - தக்வா என்பது செயல்பாடும்தான்


தக்வா என்பதற்கு இறையச்சம் என்று மட்டும் பொருள் கொண்டால் அது உள்ளத்தோடு மட்டும் சுருங்கிவிடும். ஆனால் தக்வா என்பது உள்ளத்தோடு மட்டும் தொடர்பு கொண்டது கிடையாது. மாறாக அது உடலையும் தொடர்பு கொண்டது. உள்ளத்தால் இறைவனை அஞ்சி உடலால் அவன் காட்டிய வழியில் நடப்பதுதான் உண்மையான தக்வா. இதையும் இறைவன் பல இடங்களில் தெளிவுபடுத்துகிறான்.


அல்லாஹ் கூறுகிறான்.


ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏


இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளத்திலுலள்ள தக்வாவால் (ஏற்பட்டது) ஆகும்.

(அல்குர்ஆன் : 22:32)


இவ்வசனத்தில் இறைவன் அல்லாஹ்வின் சின்னங்களை பற்றி எடுத்துரைக்கிறான். இது அல்லாஹ்விற்காக பலியிடக்கூடிய பலிப்பிராணிகளை பற்றி பேசும் வசனம். பலிப்பிராணிக்கு தகுந்த கண்ணியம் வழங்கப்பட வேண்டும். அது செயல்பாடு சார்ந்தது. ஆனால் அதற்கு உள்ளத்தில் தக்வா இருக்க வேண்டும் என்று இறைவன் கூறுகிறான்.


لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌  وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا  وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏


புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

(அல்குர்ஆன் : 2:177)


மேற்கூறிய வசனமும் நற்செயல்களை செய்பவர்கள்தான் முத்தக்கீன்கள் என்று தெரிவிக்கிறது.


இதை நபியவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது : "ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அஃதல்லாத வேறொன்றை அதைவிட தக்வாவிற்குரிய செயலாகக் கருதும்பட்சத்தில் அந்த தக்வாவிற்குரிய செயலையே அவர் செய்யட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை (மட்டும்) நான் கேட்டிராவிட்டால், நான் எனது சத்தியத்தை முறித்திருக்கமாட்டேன்" என்று கூறினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 3394. 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்யவேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ,அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5010. 


மேற்கூறிய இரண்டு வசனங்களும் தக்வா என்பது உள்ளத்தோடும் செயல்களோடும் சம்பந்தப்பட்டது என்பதை தெரிவிக்கிறது.


Tuesday, August 26, 2025

மீலாதும் மவ்லீதும் மார்க்கத்தில் உள்ளதா?

 ஏக இறைவனின் திருப்பெயரால்…



மீலாதும் மவ்லீதும் மார்க்கத்தில் உள்ளதா?


புத்தகமாக டவுன்லோடு செய்ய

 மீலாதும் மவ்லீதும் மார்க்கத்தில் உள்ளதா

செய்யது காமித்

6381653548

இஸ்தப்ரக் பதிப்பகம்



பாகம் - 1 பிறந்தநாள் (மீலாத்) கொண்டாடலாமா?


இறைவன் என்பவன் படைத்தல்இ காத்தல்இ அழித்தல் ஆகியவற்றை மட்டும் செய்பவன் அல்ல. மாறாக மனிதர்களுக்கு வழிகாட்டும் வேலையையும் செய்பவன்தான் அல்லாஹ்.


அந்தவகையில் இறைவன் மனிதர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காக இறைத்தூதர்களை தேர்வு செய்து அவர்களிடம் இறைவேதங்களையும் கொடுத்து அனுப்பியுள்ளான். 


ஆகவே முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அமைந்துள்ளது.


குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஒரு மனிதன் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது என்ற அனைத்து விஷயங்களும் விளக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒரு முஃமின் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்? எதற்கு முக்கியத்துவம் வழங்கத் தேவையில்லை? ஆகிய வழிகாட்டுதல்களும் அவற்றில் உள்ளது.


ஆகவே பிறந்தநாள் குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது? அதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமா இல்லையா?


அவற்றை ஆய்வு செய்து பார்க்கையில் இஸ்லாத்தில் பிறந்த நாளிற்கு எத்தகைய சிறப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். பிறந்த நாள் குறித்து எவ்வித வழிகாட்டுதலும் குர்ஆனில் இடம்பெறவில்லை.


மாறாக ஒரு மனிதர் தியாகம் செய்த நாள்தான் சிறப்புக்குரியது என்பதை குர்ஆன் நமக்கு உணர்த்துகிறது. அதற்குத்தான் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று இறைவன் வழிகாட்டியிருக்கிறான். உதாரணம்…


இஸ்மாயில் நபி 


இறைவன் தனது திருமறையில் இஸ்மாயில் நபி பிறந்ததைப் பற்றிக் கூறுகிறான். ஆனால் அதற்கு எந்த சிறப்பும் இருப்பதாகக் கூறவில்லை. 


இப்றாஹிம் நபி தனது தள்ளாத வயது வரையிலும் குழந்தை பாக்கியத்தை பெறவில்லை. அதன்பிறகே அவர்களுக்கு இஸ்மாயில் நபி பிறந்தார்கள்.


“என் இறைவனே! எனக்கு (வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இறைஞ்சினார்.) எனவேஇ பொறுமைமிக்க ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.


அல்குர்ஆன் 37 : 100-101


இஸ்மாயிலா நபி பிறப்பதற்கு முன்பே பொறுமைசாலி என்ற சிறப்போடு பிறந்தார்கள். இருந்தபோதிலும் அவர்கள் பிறந்த நாள் எது என்பதையோ அதை சிறப்புப் படுத்துங்கள் என்றோ அல்லாஹ் கூறவில்லை.


அதைப்போல் இஸ்மாயில் நபி அவர்கள் குழந்தையாக இருக்கும் போது மக்காவில் விடப்பட்டார்கள். அங்கு அவர்களும் அவர்களது தாயாரும்  கஷ்டப்பட்டார்கள். அதன்பிறகு அவர்கள் வளர்ந்து வாலிப பருவத்தை அடைந்ததும் அவர்களை அறுக்குமாறு இப்றாஹிம் நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளைக்கு அவ்விருவரும் கட்டுப்பட்டனர். அதன் சிறப்பாகத்தான் குர்பானி என்ற கடமை நம்மீது விதிக்கப்பட்டது.


இவ்வாறு இஸ்மாயில் நபியின் தியாகத்தை முன்னிட்டு அவர்கள் தன்னை பலியாக்க முன்வந்த நாளை ஹஜ் பெருநாளாக அல்லாஹ் அறிவித்தான். இதை ஒவ்வொரு வருடமும் நாம் கொண்டாடி வருகிறோம்.


ஆக இதன்மூலம் பிறந்த நாளிற்கு எத்தகைய சிறப்பும் இல்லை என்பதும் தியாகம் செய்த நாள்தான் நினைவு கூரத்தக்கது என்பதையும் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.



மூஸா நபி 


மூஸா நபியின் பிறப்பு பற்றி இறைவன் தனது திருமறையில் தெரிவித்திருக்கிறான். அப்போது ஃபிர்அவ்ன் என்பவன் ஆட்சி செய்தான். அவன் கொடுங்கோலனாக இருந்தான். பனூ இஸ்ரவேலர்களின் ஆண்பிள்ளைகளை கொலை செய்ய வேண்டும் என்று அவன் உத்தரவு பிறப்பித்திருந்தான். அந்நேரத்தில்தான் மூஸா நபி பிறந்தார்கள். ஆகவேதான் அவரது தாயார் பயந்தார்.


அல்லாஹ் கூறுகிறான் :


மூஸாவின் தாயாரிடம்இ “இவருக்குப் பாலூட்டுவீராக! நீர் இவர் விஷயத்தில் பயந்தால் அவரை(ப் பெட்டியில் வைத்து)க் கடலில் போட்டு விடுவீராக! பயப்படாதீர்! கவலையும் கொள்ளாதீர். அவரை மீண்டும் உம்மிடம் கொண்டு வந்து சேர்ப்போம். அவரைத் தூதர்களில் ஒருவராக்குவோம்” என்று அறிவித்தோம்.


அல்குர்ஆன் 28 : 7


மூஸா நபி இக்கட்டான சூழ்நிலையில் பிறந்தார்கள். அவர்களை அல்லாஹ்தான் பாதுகாத்தான். அந்தவகையில் அவர்களது பிறப்பு ஒரு தனித்துவமிக்கதுதான். ஆனாலும் அது எந்த நாள் என்பதைபன பற்றி அல்லாஹ் குறிப்பிடவில்லை. 


அதன்பிறகு மூஸா நபி வளர்ந்து வாலிபராகி நபியாக ஆன பின்னர் ஃபிர்அவ்னிடம் பிரச்சாரம் செய்தார்கள். அதனால் ஃபிர்அவ்ன் கோபம் கொண்டு அவர்களை அழிக்கத் துடித்தான். அப்போது மூஸா நபி பனூ இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு எகிப்தை விட்டு வெளியேற முனைந்நடதார்கள். இதை அறிந்த ஃபிர்அவ்ன் அவர்களைத் துரத்தினான். அப்போது அல்லாஹ் கடல்களைப் பிளக்கச் செய்து பிர்அவ்னிடமிருந்து மூஸா நபியைக் காப்பாற்றினான். 


அல்லாஹ் கூறுகிறான் :


அப்போது நாம் மூஸாவிடம்இ “உம்முடைய கைத்தடியால் கடலை அடிப்பீராக!” என அறிவித்தோம். அக்கடல் பிளந்துஇ ஒவ்வொரு பகுதியும் பெரும் மலையைப் போல் ஆனது.


(துரத்தி வந்த) மற்றவர்களையும் அந்த இடத்திற்கு நெருங்கிவரச் செய்தோம்.

மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பிறகுஇ மற்றவர்களை (கடலில்) மூழ்கடித்தோம்.


அல்குர்ஆன் 26 : 63 - 66


இதில் மூஸா நபி ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனை எதிர்ந்து நின்றார்கள். அல்லாஹ்விற்காக தனது உயிரைத் தியாகம் செய்ய முன்வந்தார்கள். ஆகவேதான் இந்த நாளை ஆஷுரா தினம் என்று இஸ்லாம் அங்கீகரித்தது.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோதுஇ யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள்இ "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றிஇ ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவேஇ மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவேஇ நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர்இ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்றுஇ நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 2083. 


ஆக இதிலிருந்துஇ மூஸா நபியின் பிறந்த தினத்தை இஸ்லாம் கண்டுகொள்ளவில்லை என்பதையும் அவர்கள் தியாகம் செய்ய முன்வந்த நாளை சிறப்பிற்குரிய நாளாக அறிவித்ததையும் அறிந்து கொள்ளலாம்.


பிறந்த நாளிற்கு எந்த சிறப்பும் இல்லை என்பதற்கும் தியாக நாளிற்குத்தான் சிறப்பு உண்டு என்பதற்கும் இதுவும் ஒரு ஆதாரமாகும்.


முஹம்மது நபி


முஹம்மது நபியின் பிறப்பு பற்றி குர்ஆனும் ஹதீஸும் கூறவில்லை. 


நபியவர்களின் பிறந்த தினம் எது? என்பதில் கூட கருத்து முரண்பாடு காணப்படுகிறது. ஆக இது பிறந்த தினத்திற்கு எந்த சிறப்பும் இல்லை என்பதற்கான ஆதாரமாகும்.


அதைப்போல் முஹம்மது அவர்கள் நபியாக தேர்வு செய்யப்பட்ட நாளை சிறப்பு நாளாக இஸ்லாம் அறிமுகப்படுத்துகிறது. 


முஹம்மது நபி தனது நாற்பதாவது வயதில் ஹிரா குகையில் வைத்து நபியாக ஆக்கப்பட்டார்கள். இந்த நாளின் இரவை லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) என்று இஸ்லாம் கூறுகிறது.


இ(வ் வேதத்)தை மதிப்புமிக்க இரவில் இறக்கினோம். மதிப்புமிக்க இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது? மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அதில் வானவர்களும்இ (ஜிப்ரீல் எனும்) ரூஹூம் தமது இறைவனின் ஆணைப்படி ஒவ்வொரு செயல்திட்டத்துடன் இறங்குகின்றனர். அமைதி (நிறைந்த இரவு). அதுஇ அதிகாலை உதயமாகும்வரை இருக்கும்.


அல்குர்ஆன் 97 : 1 - 5


முஹம்மது நபியின் பிறப்பைப் பற்றி ஒன்றும் கூறாத இறைவன் அவர்கள் நபியாக்கப்பட்டதை சிறப்பித்துக் கூறியிருக்கிறான்.


இந்த நாளை ஒவ்வொரு வருடமும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!' 


என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 2017. 


இந்த நாள்தான் லைலத்துல் கத்ர் என்று தெளிவாக அறிவிக்கப்படாவிட்டாலும் ஐந்து நாள்களில் ஒரு நாளாக லைலத்துல் கத்ர் இரவு இருக்கும் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் அதைத் தேடுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள். 


ஆக இதிலிருந்து இஸ்லாம் பிறந்த நாளிற்கு எத்தகைய முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.


கிரகணம்


மேலும் ஒருவருடைய பிறப்பில் எந்த சிறப்பும் இல்லை என்பதை நபிகளார் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.





இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :


'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்பிற்காகவோ பிறப்பிற்காகவோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. 


ஸஹீஹ் புகாரி : 5197. 


இந்த நபிமொழி பிறப்பிற்கு எத்தகைய முக்கியத்துவமும் இல்லை என்பதை ஆணித்தரமாக அறிவிக்கிறது.


நபித்தோழர்களின் நடைமுறை


ஆகவேதான் நபித்தோழர்கள் ஹிஜ்ரி ஆண்டை நபியின் பிறப்பை வைத்து முடிவு செய்யவில்லை. பிறப்பிற்கு தனி முக்கியத்துவம் இருந்திருந்தால் அவர்கள் நபியின் பிறப்பின் அடிப்படையில் ஹிஜ்ரி ஆண்டை முடிவு செய்திருப்பார்கள்.


ஆனால் நபித்தோழர்களோ நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த ஆண்டைத்தான் தங்களுக்கான ஆண்டுக் கணக்கீடாக முடிவு செய்தார்கள்.


ஆக நபித்தோழர்களும் பிறப்பிற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதையும் அவர்களும் ஹிஜ்ரத் எனும் தியாகத்திற்குத்தான் முன்னுரிமை வழங்கினார்கள் என்பதையும் இதன்மூலம் விளங்கிக் கொள்ளலாம்.



பிறந்த நாள் அல்ல பிறந்த கிழமை


அதைப்போல் இஸ்லாம் பிறந்த நாளிற்கு முக்கியத்துவம் வழங்காமல் பிறந்த தேதிக்கு முக்கியத்துவம் வழங்கும் நடைமுறையை காட்டித் தருகிறது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.- 


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 1547. 


அல்லாஹ் ஆதம் நபியை வெள்ளிக்கிழமையில் படைத்ததாகவும் அதனால் வெள்ளிக்கிழமை சிறப்பிற்குரிய கிழமை எனவும் நபிகளார் தெரிவிக்கிறார்கள்.


ஆகவேதான் வெள்ளிக்கிழமையை சிறிய பெருநாளாக இஸ்லாம் அறிவித்திருக்கிறது. அந்நாளில் குளிக்க வேண்டும் எனவும் இருப்பதில் சிறந்த உடையை அணிய வேண்டும் எனவும் மார்க்கம் கட்டளையிட்டிருக்கிறது.


ஆக இதிலிருந்து பிறந்த நாளை சிறப்பிற்குரியதாக கருதுவது இஸ்லாத்தின் நடைமுறை அல்ல என்பதையும் தேதிக்குத்தான் அல்லாஹ் முன்னுரிமை அளித்துள்ளான் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.


இதற்கு இன்னொரு விஷயமும் ஆதாரமாக உள்ளது.


அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்இ திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 2153. 


இதிலும் நபிகளார் கிழமையைத்தான் சிறப்புப் படுத்தியிருக்கிறார்கள். திங்கள் கிழமையில் தான் பிறந்ததாகவும் அந்நாளில்தான் தனக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


ஆக இதிலிருந்து பிறந்த நாள் என்ன ஒன்று இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் இல்லை என்பதை விளங்கிக் காெள்ளலாம்.


பிறந்த நாள் கொண்டாட்டம் மாற்றுமத கலாசாசாரம்


வரலாற்றைத் தேடிப் பார்க்கையில் பிறந்த நாள் என்பதை  முதன்முதலாகக் கொண்டாடியவர்கள் எகிப்தியர்கள் எனத் தெரிகிறது. அவர்கள் தங்களது மன்னன் ஆட்சியில் ஏறிய நாளை பிறந்த நாள் என்று அறிவித்துக் கொண்டாடினார்கள். ஆனால் அனைவரும் கொண்டாடவில்லை.


கிரேக்கர்கள் தங்களது கடவுள்களுக்கு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியிருக்கிறார்கள்.


ரோமர்களில் அரசர்களளும் முக்கியஸ்தர்களும் பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள்.


ஆரம்பகாலத்தில் கிறிஸ்தவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. அவர்களது மார்க்கம் சிதைக்கப்பட்ட பிறகு அவர்கள் கிறிஸ்துமஸ் என்று பிறந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினர். அதன்பிறகுதான் அவர்கள் இதை உலகம் முழுக்கப் பரப்பினார்கள்.


ஆகவே இது மாற்றுமதக் கலாச்சாரமாக உள்ளது.


ஏனெனில் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் என்று கூறி இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.


அதைப்போல் ஹிந்துக்களும் தங்களது கடவுளர்களான கிருஷணர்இ ராமர் போன்றவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்திஇ ராம ஜெயந்தி என்று பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளனர்.


ஆனால் நபிகள் நாயகமோ நபித்தோழர்களோ பிறந்தநாள் கொண்டாடியதாக எத்தகைய ஆதாரமும் இல்லை. ஏனெனில் அவர்கள் பிறந்த நாள் கொண்டாடியதில்லை.


ஆனால் பிற்காலத்தில் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்று கூறி மீலாத் விழாக்களை சில இஸ்லாமியர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்கும் மார்க்கத்திற்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை. ஏனெனில் இது இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல. மாறாக இது மாற்றுமத கலாச்சாரம்.


இதைப் பற்றி நபிகளார் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.


யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


நூல்: அபூதாவூத்-4031 (3512)


ஆக இந்த அடிப்படையில் நபிகளாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது மார்க்கத்திற்கு முரணான காரியம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


மீலாத் விழாவைக் கொண்டாடுபவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம்இ நாங்கள் நபிகளார் மீது நேசம் வைத்திருக்கிறோம். ஆகவேதான் அவர்களது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்பதாகும்.


நாம் உண்மையிலேயே நபிகளார் மீது நேசம் வைத்திருந்தால் நபிகளார் காட்டிய வழியில்தான் நடந்திருப்போம். நபிகளார் திங்கள் கிழமை தான் பிறந்ததாகக் கூறினார்கள். மேலும் அந்த தினத்தில் நோன்பு வைப்பதை சிறந்தது என்று கூறினார்கள். 


ஆகவே ஒருவர் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமானால் அவர் ஒவ்வொரு திங்கள் கிழமையும் அவர்களது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். அதுதான் நபிவழியைப் பின்பற்றியதாக அமையும். மாறாக இதைவிடுத்து ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவது மாற்றுமத கலாச்சாரமாகும்.



பாகம் 2 - மவ்லீத் ஓதலாமா



பிறந்த நாள் கொண்டாடுவது இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல என்பதையும் அது மாற்றுமத கலாச்சாரம் என்பதையும் பாகம் 1 ல் கண்டோம்.


ஆகவே மீலாது விழாவிற்காக மவ்லீத் ஓதுவதும் கூடாது என்பது தெளிவாகிறது.


அதுமட்டுமில்லாமல் மவ்லீத் என்பது நபியவர்களை புகழும் விதமாக கவிதை வடிவில் இயற்றப்பட்டுள்ளது.


ஆகவே நாம்இ


நபியை புகழலாமா? 

கவிதைக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

மவ்லீதில் இடம்பெற்றிருக்கும் வாக்கியங்கள் சரியானவைதானா?  ஆகிய மூன்று விஷயங்களை ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

நபியை புகழக்கூடாதா?


மவ்லீத் ஓதுபவர்கள்இ நாங்கள் நபிகளாரைப் புகழ்கிறோம் என்று கூறுகிறார்கள். மேலும் மவ்லீத் ஓதுவதைத் தடுப்பவர்கள் நபிகளாரை புகழ்வதைத் தடுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.


ஆகவே நாம் நபியை புகழலாமா? கூடாதா?  என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


நபியை புகழ்வது அனுமதிக்கப்பட்டது


நபிகளாரை புகழ்வது முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அல்லாஹ்வே நபிகளாரை புகழந்துள்ளான்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏⭘ 


உமது புகழை உமக்கு உயர்த்தினோம்.


அல் குர்ஆன் -   94 : 4


وَمَآ أَرْسَلْنَـٰكَ إِلَّا رَحْمَةًۭ لِّلْعَـٰلَمِينَ⭘ 


(நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.


அல் குர்ஆன் -   21 : 107


மேற்கூறிய இரண்டு வசனங்களும் நபிகளாரை அல்லாஹ் புகழ்ந்திருக்கிறான் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும் நபியின் புகழை உயர்த்தியிருப்பதாகவும் அல்லாஹ் தெரிவிக்கிறான். ஆகவே அவர்களது புகழை தாழ்த்துவது முஸ்லிம்களுக்கு அழகல்ல.


எனவேதான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் :


وَلَا يَرْغَبُوا۟ بِأَنفُسِهِمْ عَن نَّفْسِهِۦ 


அவரது உயிரைவிடத் தமது உயிர்களை நேசிப்பதும் தகுதியானதல்ல! 


அல் குர்ஆன் -   9 : 120


நபிகளாரைப் புகழும் விதமாக தங்களது உயிரைவிட அவர்களை நேசிப்பது கடமை என்று அல்லாஹ் தெரிவிக்கிறான் 


வரம்பு மீறுதல் கூடாது


நபியை அல்லாஹ் புகழ்ந்துள்ளான். ஆகவே நாமும் அவர்களைப் புகழலாம். ஆனால் அந்த புகழ்ச்சியில் வரம்பு மீறுதல் இருக்கக்கூடாது.


இதை நபிகளார் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.


எனக்காக எழுந்திருக்கக்கூடாது


உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. எனறாலும்இ அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)இ


நூல்: அஹ்மத்-12526 (12068)


தான் வந்தால் தனக்காக எழுந்திருக்கக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இதிலிருந்து நபிகளார் தன்னை வரம்பு மீறி கண்ணியப்படுத்துவதை விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆகவே அவர்களைப் புகழும் போதும் நாம் வரம்பு மீறக்கூடாது.


சஜ்தா செய்யக்கூடாது


ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சஜ்தா செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் கணவனுக்கு மனைவி ஸஜ்தா செய்வதை நான் அனுமதித்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


நூல் :திர்மிதி:1079


நாம் அல்லாஹ்விற்காக மட்டுமே சஜ்தா செய்ய வேண்டும். ஆகவேதான் நபியை கண்ணியப்படுத்துகிறோம் என்று கூறி அவர்களுக்கு சஜ்தா செய்வதை நபிகளார் விரும்பவில்லை. இதிலிருந்து நபிகளார் தன்னை அல்லாஹ் அளவிற்கு உயர்த்திக் கொள்வதை விரும்பவில்லை என்பது தெரிகிறது.


என்னை வரம்பு மீறி புகழாதீர்கள்


இதை நபிகளார் தனியாகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.


நபி (ஸல்) அவர்கள்இ “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில்இ நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள் என்று கூறினார்கள்’’ என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நூல்: புகாரி-3445 


ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்கள் :


எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் - ரஹ் - அவர்களிடம்) 'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்' (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமிஇ 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்' என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள்இ 'இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 4001.


மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் நபிகளாரை வரம்பு மீறி புகழக்கூடாது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.


ஆகவே நாம் நபிகளாரை புகழும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் வரம்பு மீறிய வார்த்தைகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இந்த அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு மவ்லீத் புத்தகங்களை ஆய்வு செய்வோம்.


அவற்றை நாம் ஆய்வு செய்து பார்த்தால் அதில் நபிகளாரை வரம்பு மீறி புகழும் வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.


மவ்லீத் கிதாபிலுள்ள வரம்பு மீறல்


மவ்லீத் புத்தகங்களில் நபிகளாரைப் புகழ்கிறோம் என்று கூறி அவர்களுக்கு அல்லாஹ்வின் பண்புகளை கொடுத்து வைத்திருக்கிறார்கள்.


உதாரணத்திற்கு.


நோய் நீக்குபவர் யார்?


اَلسَّلاَمُ عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ


‘நோய் நீக்குபவரே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்’


சுபஹான மவ்லீத் பக்கம் 5


وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا

لَدَيْهِ بُرْءُ السَّقَامِ

‘நீ நோயாளியாக இருந்தால் அதற்கான நிவாரணம் அவரிடமே (நபியிடமே உள்ளது’


சுபஹான மவ்லீத் பக்கம் 37


وَمَرِيْضًا اَنْتَ عَائِدُهُ

قَدْ اَتَاهُ اللّهُ بِالْفَرَجِ


‘(நபியே நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்கச் சென்றாலும் அல்லாஹ் அவருக்கு நிவாரணம் வழங்கி விடுவான்!’


சுபஹான மவ்லீத் பக்கம் 23


மேற்கூறிய மூன்று வரிகளும் சுபஹான மவ்லீதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.


இந்த வாசகங்கள் நபிகளாரால் நோயை நீக்க முடியும் என்பதை தெரிவிக்கிறது. ஆனால் உண்மையில் அல்லாஹ் மட்டுமே நோயை நீக்கக்கூடியவன் ஆவான். அதுதான் இஸ்லாத்தின் உண்மையான நம்பிக்கை.


அல்லாஹ் இப்ராகிம் நபி கூறியதாக திருமறையில் தெரிவிக்கிறான்.


நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.


(அல்குர்ஆன் 26 :80)


அதைப்போல் அய்யூப் நபியின் பிரார்த்தனையை இறைவன் தெரிவிக்கிறான்.


எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போதுஇ அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.


(அல்குர்ஆன் 21:83)


அதைப்போல் முஹம்மது நபியையும் கீழ்க்கண்டவாறு பிரார்த்தனை செய்யுமாறு அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.


وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّۢ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ ۖ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍۢ فَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ⭘

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 6:17)


மேற்கூறிய மூன்று வசனங்களும் அல்லாஹ்வால் மட்டும்தான் நோயை நீக்க முடியும் என்பதை தெரிவிக்கிறது.


ஆகவே மேற்கூறிய மவ்லீத் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் நபியை வரம்பு மீறி புகழ்ந்த வாசகங்கள் என்பது தெளிவாகிறது. 


இதுபோன்ற ஏராளமான வாசகங்கள் மவ்லீத் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. இது மவ்லீத் ஓதக்கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.


கவிதைப் பற்றிய இஸ்லாத்தின் நிலை


கவிதைகள் படிப்பதை மார்க்கம் அனுமதித்திருந்தாலும் அதை வெறுப்பிற்குரிய ஒரு காரியமாகத்தான் இஸ்லாம் பார்க்கிறது.

 

ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் நபிகளாருக்கும் கவிதைக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவிக்கிறான். 


وَمَا عَلَّمْنَـٰهُ ٱلشِّعْرَ وَمَا يَنۢبَغِى لَهُۥٓ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ وَقُرْءَانٌۭ مُّبِينٌۭ⭘ 


நாம் இவருக்குக் கவிதையைக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்கு அவசியமானதும் அல்ல! இது நற்போதனையும்இ தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. 


அல் குர்ஆன் -   36 : 69


மேலும் மற்றொரு இடத்தில் கவிஞர்களைப் பின்பற்றக்கூடாது என்று தெரிவிக்கிறான்.


وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ⭘ 


வழிகேடர்களே கவிஞர்களைப் பின்பற்றுகின்றனர். 


அல் குர்ஆன் -   26 : 224


அதுமட்டுமில்லாமல் நபிகளார் கவிதைப் படிப்பவரை ஷைத்தான் என்று ஏசியிருக்கிறார்கள்.


6032 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِىُّ حَدَّثَنَا لَيْثٌ عَنِ ابْنِ الْهَادِ عَنْ يُحَنِّسَ مَوْلَى مُصْعَبِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ

بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- بِالْعَرْجِ إِذْ عَرَضَ شَاعِرٌ يُنْشِدُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « خُذُوا الشَّيْطَانَ أَوْ أَمْسِكُوا الشَّيْطَانَ لأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا ».

அபூசயீத் அல்குத்ரீ (ரரி­) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘அல்அர்ஜ்’ எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ ”அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள் (முஸ்லி­ம் 4548)


இந்த நபிமொழிமூலம் கவிதைகள் மோசமானது என்பதை நபிகளார் தெரியப்படுத்தியுள்ளார்கள்.


ஆகவே நாம் நபிகளாரைப் புகழ வேண்டுமானால் அதற்கு கவிதைகள் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. மாறாக குர்ஆனில் அவர்கள் பற்றி கூறப்பட்டுள்ள வசனங்களைக் கூறினாலே போதுமானது.


பொய்யான தகவல்கள்


மவ்லீத் கிதாபுக்களில் நிறைய பொய்யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


மார்க்கத்தில் பொய் சொல்வது பாவமாகும். அதிலும் நபியவர்கள் மீது இட்டுக்கட்டி கூறுவது மாபெரும் பாவமாகும் 


'என் மீதுஇ எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான்இ உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.


ஸஹீஹ் புகாரி : 108. 


நபியின் மீதான பொய்கள் மவ்லீது கிதாபுகளில் இடம்பெற்றுள்ளது. அதற்கான உதாரணம்


இறைவன் முதலில் படைத்தது எது?


“أَنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ نُورَ مُحَمَّدٍ”


அல்லாஹ் முதலில் படைத்தது நபியின் ஔியைத்தான்


சுபஹான மவ்லீத் பக்கம் 16


இது நபியின் மீதும் அல்லாஹ்வின் மீதும் இட்டுக்கட்டி கூறியதாகும். ஏனெனில் அல்லாஹ் எதை முதலிலா படைத்தான் என்பதை நபிகளார் நமக்கு கூறியிருக்கிறார்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


"அல்லாஹ் முதலில் படைத்தது பேனா. பின்னர் அதை எழுதும்படி கட்டளையிட்டான். எனவே அது மறுமை நாள் வரை நடக்கும் அனைத்தையும் எழுதுகிறது."

(திர்மிதி 2155இ அபூதாவூத் 4700 மற்றும் அஹ்மத் 22705)


மேற்கண்ட நபிமொழி பேனாதான் முதலில் படைக்கப்பட்டதாக கூறுகிறது. ஆனால் மவ்லித் கிதாபுகளோ இதற்கு மாற்றமான கருத்தைத் தெரிவிக்கின்றன.


ஆதம் நபிக்கு முன்பே முஹம்மது நபி படைக்கப்பட்டார்களா?



وَأَوْجَدَ نُوره قبل خلق آدم بالقي عام وكان نُورُهُ يُسَبِّح اللهَ الوَاحِدَ القَهَّار سلو تسبح بتسبيحه الملائكة الأبرار فَلَمَّا خَلَقَ اللهُ تَعَالَى آدَمَ عَلَيْهِ السَّلام انتقل ذلك النُّورُ إِلَيْهِ وَصَارَ مَحْفُوظًا لَدَيْهِ


ஆதம் நபியை படைப்பதற்கு 2000 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபி தனது ஔியைப் பெற்றுக் கொண்டார்கள். அப்போது நபியின் ஔி அடக்கியாள்பவனும் ஒற்றையானவனுமான அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருந்தது. நபியின் புகழைப் பின் தொடர்ந்து மலக்குமார்களும் புகழ்கிறார்கள். ஆதம் நபியை படைத்த போது அந்த ஔி ஆதம் நபிக்குள் புகுந்து பாதுகாக்கப்பட்டது. 


சுபஹான மவ்லீத் 9ம் பக்கம்


அல்லாஹ் ஆதம் நபியைத்தான் முதன்முதலில் படைத்தான் என்பதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஏனெனில் அவ்வாறுதான் அல்லாஹ் கூறியுள்ளான்.


அல்லாஹ் கூறுகிறான் :


وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَـٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌۭ فِى ٱلْأَرْضِ خَلِيفَةًۭ ۖ قَالُوٓا۟ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ ٱلدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّىٓ أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ⭘ 


“வழித்தோன்றல்களை ஏற்படுத்தும் ஒரு படைப்பை பூமியில் உருவாக்கப் போகிறேன்” என்று வானவர்களிடம் உமது இறைவன் கூறியபோதுஇ “குழப்பம் செய்துஇ இரத்தம் சிந்தக் கூடியவர்களையா அதில் நீ உருவாக்கப் போகிறாய்? நாங்கள்தான் உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைப் போற்றுகிறோமே! உன்னைத் தூயவன் என்று கூறுகின்றோமே!” என்று அவர்கள் கூறினர். “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்” என்று அவன் கூறினான்.


அல் குர்ஆன் -   2 : 30


அல்லாஹ் ஆதம் நபியைப் படைக்கப் போவதாக மலக்குகளிடம் தெரிவிக்கிறான். அதற்கு மலக்குகள்இ நாங்கள்தான் உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைப் போற்றுகிறோமே! உன்னைத் தூயவன் என்று கூறுகின்றோமே!” என்று கூறுகிறார்கள்.


ஆக மலக்குகள் இயல்பாகவே அல்லாஹ்வைப் புகழக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படித்தான் அவர்களை அல்லாஹ் படைத்துள்ளான். 


அவர்கள் முஹம்மது நபியிடமிருந்து கற்று அல்லாஹ்வை புகழக்கூடியவர்களாக இருக்கவில்லை. அவ்வாறிருந்திருந்தால் முஹம்மது நபி இருக்கையில் மற்றவர்களை ஏன் படைக்கிறாய்? என்று கேட்டிருப்பார்கள்.


ஆக இது பொய்யான கட்டுக்கதை என்பது தெளிவாகிறது.


இவ்வாறு நபியின் மீதும் அல்லாஹ்வின் மீதும் பிற நபிமார்கள் மற்றும் மலக்குகளின் மீதும் பொய்யானக் கட்டுக்கதைகள் மவ்லீதில் கூறப்பட்டுள்ளது.


எனவே நாம் மவ்லீது ஓதினால் பொய்யைப் பரப்பியவர்கள் ஆவோம்.


மவ்லீது ஓதுவது மாற்றுமத கலாச்சாரம்


நபிகளார் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதையும் உரை நிகழ்த்துவதையும் ஒரு இபாதத்தாக வழிகாட்டியிருக்கிறார்கள்.


கூட்டாக அமர்ந்து கவிதை வரிகளையும் (வரம்பு மீறிய) புகழ்ப்பாடல்களையும் படிக்குமாறு நமக்குக் கற்றுத்தரவில்லை. இது இஸ்லாமிய கலாச்சாரம் அல்ல.


மாறாக ஹிந்துக்களும் கிறிஸ்துவர்களும் தான் அவர்களது வணக்கஸ்தலங்களில் கூட்டாக அமர்ந்து பாடல் படிப்பார்கள். 


ஹிந்துக்கள் கோயிலில் கூட்டாக அமர்ந்து பஜனை பாடுவார்கள். கிருஷ்ண ஜெயந்திஇ ராமர் ஜெயந்தி போன்ற அவர்களது கடவுளர்களின் பிறந்தநாளிற்கு இவ்வாறு பாடல் படிப்பார்கள்.


கிறிஸ்தவர்கள் சர்ச்சில் அமர்ந்து ஜெபம் பாடுவார்கள். கிறிஸ்துமஸ் அன்று கூட்டாக அமர்ந்து பாடல் பாடுவார்கள்.


ஆகவே இது மாற்றுமத கலாச்சாரம்  என்பது தெளிவாகிறது.


அத்தகைய மாற்றுமத கலாச்சாரத்தைத்தான் முஸ்லிம்கள் காப்பியடித்துஇ மசூதியில் அமர்ந்து மவ்லீத் பாடுகிறார்கள்.


இதைப் பற்றி நபிகளார் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.


யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


நூல்: அபூதாவூத்-4031 (3512)


(பின்குறிப்பு : மவ்லீதில் ஏராளமான ஷிர்க்கான வாசகங்களும் கட்டுக்கதைகளும் இடம்பெற்றுள்ளது. அவை அனைத்தையும் நாம் குறிப்பிடவில்லை. உதாரணத்திற்கு ஒரு சில விஷயங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளோம். ஏனெனில் அவை அனைத்தையும் குறிப்பிட்டு பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. விரிவாக அறிய விரும்புபவர் அவற்றைப் படித்துக் கொள்ளலாம்.)


இஸ்லாம் பரிபூரணமானது

 இஸ்லாம் பரிபூரணமானது நமது தேவைக்குப் போதுமான பணம் நம்மிடத்தில் இருக்கும் பட்சத்தில் நாம் பிறரிடம் கடன் வாங்குவதில்லை. நமது நாட்டிற்கு போதும...