Saturday, September 29, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 14




131) சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் முஃமின்களிடம் எதை வாங்குகிறான்?

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின்

♦உயிர்களையும்,
♦செல்வங்களையும்

சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். 

திருக்குர்ஆன்  9:111

132) யாருடைய முகங்களில் இருளும் இழிவும் ஏற்படாது?

நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதை விட) அதிகமாகவும் உண்டு. அவர்களின் முகங்களில் இருளோ, இழிவோ ஏற்படாது. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன்  10:26

133) செவிமடுக்கும் சமுதாயத்திற்கு எதில் சான்று உள்ளது?

இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன்  10:67

134) இஸ்ராயீலின் மக்கள் எது வரையிலும் முரண்படவில்லை?

இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம்.

அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை. உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.

திருக்குர்ஆன்  10:93

135) பெருமிதமும் கர்வமும் காெள்ளாதவர்கள் யார்?

அவன் பெருமிதமும், கர்வமும் கொள்கிறான். (துன்பங்களை) சகித்துக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைத் தவிர. அவர்களுக்கே மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.  

திருக்குர்ஆன்  11:11

136) நபியின் உள்ளம் எதனால் சங்கடப்படும்?

"இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.

திருக்குர்ஆன்  11:12

137) வலிமைக்கு மேல் வலிமை பெற என்ன செய்ய வேண்டும்?

"என் சமுதாயமே! உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்களுக்கு, தொடர்ந்து வானத்தைப் பொழியச் செய்வான். வலிமைக்கு மேல் வலிமையை உங்களுக்கு அதிகமாக்குவான். குற்றவாளிகளாகி புறக்கணிக்காதீர்கள்!'' (எனவும் கூறினார்.)

திருக்குர்ஆன்  11:52

138) இறைவனிடம் அடையாளமிப்பட்டது எது?

(லூத் நபி வாழ்ந்த சமுதாயத்தினர் அழிக்கப்பட்ட ஊர்) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.  

திருக்குர்ஆன்  11:83

139) மறுமையில் ஃபிர்அவ்னின் சபையினரை நரகத்திற்கு யார் அழைத்து செல்வார்?

கியாமத் நாளில்அவன் தனது சமுதாயத்திற்கு முன்னால் வருவான். அவர்களை நரகிற்கு அழைத்துச் செல்வான். சென்றடையும் அந்த இடம் மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன்  11:98

140) தீமைகளை அழிக்கக்கூடியது எது?

பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.  

திருக்குர்ஆன்  11:114

No comments:

Post a Comment

சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...