சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5462.
படிப்பினைகள்
பறவை நாளைக்காக எதையும் சேமித்து வைப்பதில்லை. அது இறைவனின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் (Trust) நிம்மதியாகப் பறக்கிறது. "பறவையின் உள்ளம்" கொண்ட மனிதன், முயற்சி செய்த பிறகு முடிவை இறைவனிடம் விட்டுவிடுவதால், இன்றைய காலகட்டத்தின் பெரும் நோயான மன அழுத்தத்திலிருந்து (Anxiety) விடுபடுகிறான்.
பறவையின் இதயத்தில் வன்மம் கிடையாது. ஒரு பறவை மற்றொரு பறவையிடம் சண்டையிட்டாலும், அடுத்த நிமிடம் அதை மறந்துவிட்டு ஒன்றாகப் பறக்கும்.
இத்தகைய மென்மையான இதயம் கொடுக்கப்பட்டவர்கள் மிகப் பெரும் பொக்கிஷம் கொடுக்கப்பட்டவர்களைப் போன்றவர்கள்.
ஆகவே மற்றவர்களது இதயம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வார்த்தைகளைத் தேர்வு செய்து கவனமாகப் பேசுபவருக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.
மனிதர்களோடு நெருங்கி வாழ்ந்து மென்மையைக் கடைபிடிப்பபோருக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.
குறைவான வேகத்தில் கோபப்பட்டு வேகமாக திருப்தி அடைவோருக்கு சுப சோபனம் உண்டாகட்டும்.
மழையைப் போன்று எங்கு விழுந்தாலும் பயனளிக்கும் வகையில் இருப்பவருக்கு சுபசோபனம் உண்டாகட்டும்.
மற்றவர்களது இதயங்களை ஆற்றுப்படுத்துவோருக்கு சுப சோபனம் உண்டாகட்டும்.
மனிதர்களது தேவைகளை அறிந்து அவர்களது இதயம் பாதிக்கப்பட்டு விடாமல் அவர்களுக்கு வாரி வழங்குவோருக்கு சுப சோபனம் உண்டாகட்டும்.
மனிதர்களது பயத்தின் போதும் அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்போருக்கு சுப சோபனம் உண்டாகட்டும்.
ஆக மொத்தத்தில் மனிதர்களை நேசிக்கும் அனைவருக்கும் சுப சோபனம் உண்டாகட்டும்